ததேகூ உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்; 9 பேர் புறக்கணிப்பு

tnaகொழும்பு: இலங்கையின் முதலாவது வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் மாகாண அமைச்சர்களும் மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முன்னிலையில் இன்று காலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெற்ற மலரஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடைபெற்றன.

இதேவேளை, வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தெரிவான 9 உறுப்பினர்கள் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வை புறக்கணித்துள்ளனர்.

ஈபிஆர்எல்எப் அமைப்பிலிருந்து அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ள பி. ஐங்கரநேசனை தவிர அக்கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட தரப்பினர் இன்றைய பதவிப் பிரமாணத்தில் கலந்துகொண்டிருக்கவில்லை.

அதேபோல், புளொட் அமைப்பின் சித்தார்த்தன் மற்றும் டெலோ அமைப்பின் கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் பதவியேற்பு நிகழ்வை புறக்கணித்திருந்ததாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

டெலோ அமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பதவிப் பிரமான நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

– BBC

Published by

Leave a comment