கொழும்பு: பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை மேல் மாகாண சபைத் தேர்தல் மூலம் அரசியலுக்குள் கொண்டுவரத் தீர்மானம் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த வருடம் நடத்தப்பட உள்ள மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் கரு ஜயசூரிய முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், கோத்தபா ராஜபக்ஷவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷவை மேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தலாம் என ஆரம்பத்தில் பேசப்பட்டது.
இதற்கு ஜனாதிபதியின் பாரியார் மற்றும் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டதாகவும் பாதுகாப்புச் செயலாளரின் அரசியல் பிரவேசத்திற்கு அவர்கள் முழு சம்மதம் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.
மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள நகரங்களில் ஆளும் கட்சிக்கு போதிய ஆதரவில்லை என்று கருதப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் கொழும்பு நகர அலங்கரிக்கும் வேலைத்திட்டங்கள் உட்பட நகர அபிவிருத்தி வேலைத்திட்டங்களால் பாதுகாப்புச் செயலாளர் நகர மக்களை கவர்ந்துள்ளதாகவும் இதனை அடிப்படையாக கொண்டு அவரை மேல் மாகாண சபைத் தேர்தலில் நிறுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் கூறுகின்றன. TW
Leave a comment