டோக்கியோ: ஜப்பானின் தென்புறத் தீவுப் பகுதிகளான ஒகினாவில் இன்று சக்தி வாய்ந்த சூறாவளிப் புயலான ‘பிடோவ்’ தாக்கக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜப்பான், சீனா, தைவான் ஆகிய மூன்று நாடுகளும் இந்த சூறாவளிக் காற்றின் தாக்கத்திற்கு ஆளாகக்கூடும் நிலையில் உள்ளன.
காற்றும், கன மழையும் இருக்கக்கூடும் என்று எச்சரித்துள்ள வானிலை மையம் சில நேரங்களில் புயல் காற்றும் தாக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
காலை 10 மணி அளவில் ஒகினாவின் தலைநகர் நஹாவிலிருந்து 200 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்தப் புயல் வடமேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் ஏர்லைன்ஸ், நிப்பான் ஏர்வேஸ் மற்றும் அதன் குறைந்த கட்டண போக்குவரத்தான பீச் ஏவியேஷன் ஆகிய மூன்று நிறுவனங்களும் தங்கள் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளன. ஹாங்காங்கிலிருந்து செயல்படும் டிராகன்ஏர் விமான நிறுவனமும் தங்களுடைய விமான சேவைகளை ரத்து செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தப்புயல் நாளை தைவானை நோக்கி நகரக்கூடும் என்பதால் அங்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் ‘உசாகி’ புயலின் விளைவை ஒகினா அனுபவித்தது. தற்போது ‘பிடோவ்’ சூறாவளி தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
![daily_painting_901_windy_day_on_the_ocean_acf65a267c441329be646b90f23e5c63[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/daily_painting_901_windy_day_on_the_ocean_acf65a267c441329be646b90f23e5c631.jpg?w=150&h=107)
Leave a comment