மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐரோப்பிய யூனியனால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித்திட்டத்தின் முதற்கட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து ஐரோப்பிய யூனியனினால் நிதியளிக்கப்பட்டு வறுமை ஒழிப்பை இலக்காகக் கொண்டு ஐந்து ஆண்டுகளுக்குரிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்தார்.
இதில், எதிர்வரும் 3 மாதங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்காக நடைமுறைப்படுத்தல் தொடர்பிலான ஆராய்வுகளே நேற்றைய தினம் நடைபெற்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை ஒழித்தல், உள்ளுர் பொருளாதார மேம்பாடு, மாவட்டத்தின் மனிதவள ஆளுமை விருத்தி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்தச் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதில், ஐரோப்பிய யூனியனின் எஸ்.டி.டி.பி திட்டத்தின் இணைந்த திட்ட முகாமையாளர் பாத்திமா நுஸ்ரத் நொசாரே, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சத்தியானந்தி,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாவட்ட கடற்றொழில் திணைக்கள பிரதி பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் திணைக்களத்தலைவர்கள், திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த ஐந்து ஆண்டுத்திட்டத்தில் 1868.5 மில்லியன் ரூபாய்கள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம், உலக உணவு மற்றும் விவசாய நிறுவனம், யுனிசெப், யுனெப்ஸ், சர்வதேச தொழிலாளர் நிறுவனம், ஐ.எப்.சி எனப்படும் சர்வதேச நிதிவள நிறுவனம், ஆகிய 6 நிறுவனங்கள இணைந்து நடைமுறைப்படுத்தவுள்ளன.
அதன்படி, வறுமை தணிப்பும் அடிப்படை கட்டுமான உதவிகள் வழங்கலும், நலிவடைந்த குடும்பங்களுக்கான சேவைகளுக்காக 1541.1மில்லியன்ரூபா, உள்ளூர் பொருளாதார அபிவிருத்திக்கு 233.4 மில்லியன் ரூபா, மாவட்டத்தின் திட்டமிடல் அபிவிருத்திக்கு 94 மில்லியன் ரூபா என திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a comment