ஷார்ஜா: 2015 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. மிக மிக சமீபத்தில்தான் இந்த அணியே உருவாக்கப்பட்டது. அதற்குள்ளாகவே இது உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
2015ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியை அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகுதிச் சுற்றின் கடைசிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் கென்யா படு தோல்வியைச் சந்தித்தது. கென்ய அணி 43.3 ஓவர்களில் 93 ஓட்டங்களில் சுருண்டு போனது. அதன் பிறகு வெற்றியை விரட்டிய ஆப்கானிஸ்தான், ஆரம்ப கட்ட சரிவுக்குப் பின்னர் மீண்டு வெற்றியைத் தொட்டது.
ஆப்கானிஸ்தான் சகலதுறை வீரர் முகம்மது நபிதான் அந்த அணிக்கு வெற்றித் தேடித் தந்தவர் ஆவார். வெற்றி ஓட்டங்களையும் அவரே எடுத்தார். பந்து வீச்சிலும் 2 விக்கெட்களச் சாய்த்தார். துடுப்பாட்டத்திலும் அவர் ஜொலித்தார். ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களை எடுத்திருந்தார் நபி.
போட்டிகளின் இறுதியில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அயர்லாந்தும், 2வது இடத்தைப் பிடித்த ஆப்கானிஸ்தானும் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
உலக அளவிலான கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் பங்கேற்பது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு 2010 மற்றும் 2012 ஐசிசி டுவென்டி உலகக் கோப்பை போட்டிகளில் அந்த அணி விளையாடியுள்ளது. இருப்பினும் ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பைப் போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
உலகக் கோப்பைப் போட்டியில் ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான் இடம் பெறும். இப்பிரிவில் அவுஸ்திரேலியா நியூசிலாந்து, வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஏ பிரிவில் இன்னொரு அணியும் இடம் பெறும். இந்த அணியைத் தேர்வு செய்யும் தகுதிச் சுற்றுப் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும்.
பி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், சிம்பாப்வே, அயர்லாந்து இன்னொரு அணிஆகியவை இடம் பெற்றுள்ளன.


Leave a comment