வடக்கு தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டது போல் பள்ளிவாயல்களை உடைத்துவிட்டு புதினம் பார்த்துக்கொண்டிருக்கும் அரசுக்கும் அதற்கு முட்டுக்கொடுப்போருக்கும் எதிராக முஸ்லிம் சமூகம் ஜனநாயகரீதியல் ஒன்றுபட முன்வராவிட்டால் இந்நாட்டு முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
தாருல் குர்ஆனில் நடைபெற்ற முஸ்லிம் மக்கள் கட்சியின் ஒன்றுகூடலின் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டர்.
அவர் தொடர்ந்து பேசியதாவது,
தமிழ் மக்கள் தேர்தலில் ஒன்று பட்டுள்ளது போன்று நாமும் ஒன்றுபட வேண்டும் என முஸ்லிம் பொதுமக்களும் ஏன் அரசியல்வாதிகளும் கூட இப்போது பேசிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். அடிக்கடி முஸ்லிம் சமூகம் தமிழ் சமூகத்தை பார்த்தே இவ்வாறு சூடு போட்டுக்கொள்ள நினைப்பதையும் அதனைக்கூட சரியாக போடாமல் தப்பு தப்பாகவே போடுவதும்தான் வேடிக்கையானது.
ஒரு விடயத்தை முஸ்லிம் சமூகம் மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் இரண்டு அரசியல் வழி முறைகள் உள்ளன. ஒன்று அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்து பிழைப்பு நடத்துவது. இரண்டு அரசாங்கத்தை எதிர்த்து தமது சமூகத்தின் தன்மானத்துக்காக அரசியல் செய்வது. இது இரண்டுமே தமிழ் சமூகத்தில் இருந்தாலும் படித்தவன் முதல் பாமரன் வரை 80 வீதமானோர் அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் தன்மான அரசியலையே ஆதரிக்கின்றான் என்பதை நடந்து முடிந்த மாகாண சபை தேர்தல் புலப்படுத்துகிறது.
இந்த நிலையில் முஸ்லிம் சமூகம் தமிழர்களைப்போல் ஒற்றுமைப்பட வேண்டும் என்றால் அரசின் எலும்புத்துண்டுக்காக சமூகத்தை காட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அ. இ. முஸ்லிம் காங்கிரஸ், அதாவுள்ளா காங்கிரஸ், மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்கள் என்பவற்றுடன் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட முடியாது. இத்தகைய கட்சிகள் தனிநபர் நலனுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் விறபவர்கள் என்பது பலதடவைகள் நிரூபிக்கப்பட்டு விட்டன.
தமிழ் மக்கள் வீதி அபிவிருத்தி, புகையிரதம், தெரு விளக்கு போன்ற சின்ன விசயங்களுக்காக மயங்காமல் தமது எதிர்கால நலனை மட்டும் சிந்தித்து வாக்களித்தார்கள். மக்கள் வரி செலுத்துவதனால் அபிவிருத்திகளை செய்வது அரசின் கடமையாகும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்துள்ளார்கள். தம்முடைய பணத்தை பெற்று அபிவிருத்தி செய்பவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் கடமை மக்களுக்கு இல்லை.
ஆனால் எங்களது பாராளுமன்ற உறுப்பினர்களோ அரசை எதிர்த்து எதையும் செய்ய முடியாது என வெட்கமில்லாமல் கூறுகின்றனர். இவர்களா மறைந்த தலைவரின் பாசறையில் வளர்ந்தவர்கள்? அவர் 81 முதல் 94 வரை அரசை எதிர்த்தே அரசியல் நடத்தினார். முஸ்லிம்கள் பிரச்சினையை உலகறியச்செய்தார். இன்று எமக்கான அபிவிருத்தி என கூறி விட்டு பள்ளிகளை உடைப்பது என்பது ஒருவனுக்கு அழகான ஆடையையும், புரியாணியையும் கொடுத்து விட்டு அவன் தலையை வெட்டுவது போன்றதாகும். இதற்குத்தான் முஸ்லிம் கட்சிகள் துணை போகின்றன.
தமிழ் மக்களின் அரசுக்கு ஆதரவான கட்சிகளும் எதிரான கட்சிகளும் ஒன்று சேரவில்லை என்பதை நாம் மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். த. தே. கூட்டமைப்பு, அமைச்சர் டக்ளசின் கட்சியுடன் ஒன்று சேரவில்லை. நாமோ அரசுக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் கட்சிகள் ஒன்று சேர வேண்டுமென எதிர் பார்ப்பது அறிவற்ற செயலாகும். அரசுக்கு எதிரான முஸ்லிம் கட்சிகளும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் ஒன்றிணைவது என்பது தமிழ் மக்களின் எடுத்துக்காட்டு அல்ல. மாறாக இவ்வாறு ஒரு கூட்டு ஏற்பட்டால் சமூகத்தின் உரிமைப்போராட்டத்துக்கு பதிலாக அங்கும் எலும்புத்துண்டுகளுக்கான சண்டைகளைத்தான் நாம் காண முடியும்.
இன்று தமிழ் மக்கள் அரச சார் கட்சிகளை குப்பையில் மட்டுமல்ல சாக்கடைக்குள் வீசி விட்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நமது சமூகத்திலோ இன்னமும் அமைச்சர்களைக்கண்டால் மாலை போட்டு பல் இளிக்கும் முஸ்லிம்களே 99 வீதம் உள்ளார்கள் என்பதுதான் பலத்த கவலைக்குரியதாகும்;. இந்த நிலையில் அரச சார்பில்லாத கட்சிகளின் பின்னால் அணி திரள முஸ்லிம் சமூகம் தயாரில்லை என்றால் தொடர்ந்தும் சமூகம் அவமானப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
இந்த நிலையை உணர்ந்து அரசுக்கு ஆதரவான கட்சிகளை ஒதுக்கிவிட்டு அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் முஸ்லிம் கட்சிகளை வளர்க்க முஸ்லிம்கள் முன் வரவேண்டும். இதற்கு முஸ்லிம் புத்திஜீவிகள், பொதுமக்கள் தயாரா என்பதுதான் பலத்த கேள்வியாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
![moulawi-mubarak-01[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/11/moulawi-mubarak-0111.jpg?w=118&h=135)
Leave a comment