கொழும்பு: எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களில் 40 வீதமானவர்கள் வெளிநாட்டிலிருந்து வருகைத் தந்தவர்கள் என்று தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் தலைவர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். 33 வீதமானோர் ஆண்களும் 7 வீதமான பெண்களும் இவ்வாறு எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
சிகிச்சைக்காக வருவோர் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றவர்கள் மற்றும் உல்லாசப்பிரயாணம் மேற்கொண்டவர்களும் உள்ளடங்குகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
எச்.ஐ.வி தொற்று இருப்பதாக சந்தேகமுள்ளவர்கள் இரத்த பரிசோதனை மூலம் அதனை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இரத்த பரிசோதனை மூலமாக மட்டுமே அதனை அறிய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
உத்தியோகப்பூர்வ தரவுகளின் படி தற்போது இலங்கையில் 1739 பேர் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர், போதைப்பொருள் பாவனையாளர்கள், சிறைக்கைதிகள், கடலோரப்பிரதேசங்களில் தமது நேரங்களை அதிகமாக செலவிடும் சிறுவர்கள் ஆகியோர் அதிகமாக எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகின்றனர்.
அவர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதனூடாக நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
.பாதுகாப்பற்ற பாலியல் உறவில் ஈடுபடவேண்டாம் என தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு பொது மக்களிடம்வேண்டுகோள் விடுத்துள்ளது. GA
Leave a comment