கிண்ணியா: கிண்ணியா பிரதேசத்தில் காணப்படுகின்ற முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் நலன் கருதிய பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவும் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமயில் நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் வருகை தந்திருந்தார். இந்நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன் முதலமைச்சருடனான சந்திப்பும் இடம்பெற்றது. இதன்போது கிண்ணியா நகரத்திற்கு அத்தியவசிய தேவையில் ஒன்றான டிப்போ அமைப்பு சம்பந்தமாக நகரபிதா ஹில்மி மஹ்ரூப் தெரிவிக்க அதனைத் தொடர்ந்து இன்னும் சில விடயங்களும் கலந்துரையாடப்பட்டது. இவற்றுக்கான சுமுகமான தீர்வுகளை விரைவில் பெற்றுத்தருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆட்டோ சங்கத்தின் நிருவாகத் கூட்டம் ஆரம்பமாக தலையுரையினை ஆட்டோ சங்கத்தின் தலைவர் ஏ. ஆர். ஏ. வாஹிட் நிகழ்த்தினார். இவர் சங்கத்தின் தலைவராக இருந்து செய்த விடயங்களையும் இனிவரும் காலத்தில் செய்யவேண்டிய விடயங்கள் சம்பந்தமாகவும் விளக்கியதோடு ஆட்டோ சங்கத்தினர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை நகரபிதாவிடமும், முதலமைச்சரிடமும் தெரிவிக்க அதனைத் தொடர்ந்து கிண்ணியா நகரபிதா உரையாற்றினார். அவர் தனதுரையில் ஆட்டோ சங்கத்தின் அனுமதிப் பத்திர பதிவுகள் சம்பந்தமாகவும், அவர்களுக்கான உரிமைகள் சம்பந்தமாகவும் உரையாற்றியதோடு முதலமைச்சரிடம் பஸ் டிப்போவுக்கான அமைப்பு விடயத்தையும் முன்வைத்தார்.
முதலமைச்சர் உரையாற்றும் போது இங்கு முன்வைக்கப்பட்ட விடயத்தினை செய்து தருவதாகவும் ஆட்டோ சங்கத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் பெற்றுத்தருவதாக உறுதியளித்ததோடு முக்கியமாக பஸ் டிப்போ சம்பந்தமாக தான் கூடிய கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், நகரசபை உறுப்பினர் ஏ.எஸ்.எம். நசீர், கிண்ணியா உலமா சபை உபதலைவர் மௌலவி ஜாபிர், தளவைத்தியசாலை டி.எம்.ஓ டொக்டர் சமீம், உதயகுமார், விஜயசுந்தர ஓ.ஐ.சி, தனேஜன், கிருபாகரன், சக்தி ஆகியோருடன் ஏராளமான ஆட்டோ சங்க உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.
இறுதியில் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நிருவாகத் தெரிவு இடம்பெற்றது. முதலில் ஆட்டோ சங்கத்தின் செயலாளராக எம்.எம்.பைசல் தெரிவுசெயய்ப்பட அதனைத் தொடர்ந்து அனைவரின் ஏகமான விருப்பத் தெரிவாக தலைவர் ஏ.ஆர்.ஏ. வாஹித் மீண்டும் இரண்டாவது முறையாகவும் ஆட்டோ சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து இணைபொருளாளர்களாக பி.எம்.மௌசூக், எம்.மஹ்ரூப் ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டதோடு இச்சங்கத்தின் ஆலோசகராக கிண்ணியா நகரபிதாவும், சட்டத்தரணியுமான டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தெரிவுசெய்யப்பட்டார். இறுதியில் இருமுறை கிண்ணியா ஆட்டோ சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட வாஹித் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

Leave a comment