டெல்லி: தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டத்தை முட்டாள்தனமானது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளதால் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அதிர்ச்சியடைந்துள்ளார். இது தமக்கு ஏற்பட்ட அவமானம் என்று கருதுவதால் பதவியை ராஜினாமா செய்யவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தண்டனை பெற்ற எம்.பி. எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாரதிய ஜனதா கட்சி மட்டுமின்றி ஆளும் காங்கிரஸிலும் எதிர்ப்பு எழுந்தது.
அதுவும் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தி, அவசரச் சட்டம் கொண்டு வந்தது முட்டாள்தனம் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இது தமக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அவமானமாக மன்மோகன் சிங் கருதியதால் உடனடியாக சோனியாவுடன் அவர் பேசினார். பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொள்ள விரும்புவதாக கூறியிருக்கிறார். இதை கேட்டதும் சோனியா கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ராகுல்காந்தி அவசரம்இ அவசரமாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு ‘இ-மெயில்’ செய்தி அனுப்பினார். ஆனாலும் மன்மோகன்சிங் மிகுந்த தர்ம சங்கடத்திலும், வருத்தத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது.
ராகுல் பேச்சால் எதிர்க் கட்சிகளிடமும் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.பிரதமர் உடனே பதவி விலகுவது நல்லது என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகிறார்கள். இதனால் மன்மோகன்சிங் சட்ட நிபுணர்களுடன் பதவி விலகுவது பற்றி ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

Leave a comment