கண்டி: முஸ்லிம்களின் உரிமைக்கு குரல் கொடுப்பவர் எனத் தம்மைக் காண்பித்து கொழும்பிலிருந்து கண்டிக்கு வந்தவர் கண்டி மாவட்ட முஸ்லிம்களின் மாகாண மக்கள் பிரதிநிதித்துவத்தை குறைத்து விட்டதாக சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத் தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுக்கப் போவதாக கூறி கண்டி வந்தவர் கண்டி மாவட்ட முஸ்லிம்களின் மாகாண பிரதிநிதித்துவத்தை குறைத்துவிட்டார்.
இது வேதனை மிக்க கண்டிக்கத் தக்க செயல். கண்டி மாவட்ட முஸ்லிம்களின் மாகாண பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு ஐ.தே.க.வால் முன்னெடுக்கப்படும் சதிகளும், சூழ்ச்சிகளும் இவர் ஊடாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அவர் கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு மாபெரும் துரோகம் இழைத்து விட்டார்.
கடந்த இரண்டு வருட காலப்பகுதிக்குள் கண்டி மாவட்டத்திற்கு 700 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான அபிவிருத்தியை நான் பெற்றுக் கொடுத்திருக்கின்றேன். அப்படி இருந்தும் கண்டி மாவட்ட முஸ்லிம்கள் அந்நபரது பசப்பு வார்த்தைகளை நம்பியது வேதனைக்குரியது. என்றாலும் நான் ஒருபோதும் கண்டி மாவட்ட முஸ்லிம்களை இடைநடுவில் விட்டுச் செல்ல மாட்டேன். அவர்களின் மேம்பாட்டுக்கு உதவுவதையும், அவர்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் தொடர்ந்தும் முன்னெடுப்பேன்.
ஆனால் கம்யூனிச கட்சியில் அரசியலை ஆரம்பித்து ஐ.தே.க. என்றும் ஐ.ம.சு. என்றும் ஸ்ரீல.மு.கா. என்றும் காலத்திற்குக் காலம் தம் நிறத்தையும், இடத்தையும் மாற்றிக் கொண்டவர் என்பதை மக்கள் மறக்கமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
Leave a comment