நைரோபி: தாக்குதலுக்கு உள்ளான நைரோபி வணிக வளாகத்தின் உள்ளே செவ்வாய்க் கிழமை ஊடுருவிச் சென்றுள்ள கென்யா பாதுகாப்புப் படைவீரர்கள், அங்கு பதுங்கியுள்ள பயங்கரவாதிகளுடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டனர். இந்த சண்டையால், பெரும் வெடி சப்தங்களும், துப்பாக்கி சப்தங்களும் வளாகம் முழுவதும் எதிரொலித்த வண்ணம் இருந்தன.
அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலத்தால் சூழப்பட்டது.
62 பேரை பலிகொண்ட இந்த பயங்கரவாதத் தாக்குதலில், இன்னமும் பலர் பிணைக்கைதிகளாக சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வணிக வளாகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாகக் கூறிய கென்ய உள்துறை அமைச்சர் ஜோசப் ஓலே லெங்கு, “விரைவில் இந்த சண்டை ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்.
வணிக வளாகத்தின் எல்லா தளங்களிலும் எங்களது துருப்புகள் உள்ளனர். பெரும்பாலான பிணையக்கைதிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். பயங்கரவாதிகள் சில கடைகளில் ஓடி ஒளிந்து வருகின்றனர். அவர்கள் தப்புவதற்கு வழியே இல்லை” என்று தெரிவித்தார்.
இதுவரை 63 பேரைக் காணவில்லை என்றும் 200 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர் என்றும் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, கென்யா பயங்கரவாதத் தாக்குதலில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்க, பிரிட்டன் பயங்கவாதிகள்: கென்ய ராணுவத் தளபதி ஜூலியஸ் கராங்கி கூறும்போது,
“தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள். சோமாலியர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டினர், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் இதில் அடங்குவர்.
எல்லோருமே ஆண்கள்தான் என்றாலும் ஒரு சிலர் பெண்களைப் போல் உடையணிந்திருந்தனர்” என்று தெரிவித்தார்.
எனினும், இந்தத் தாக்குதலில் இரண்டு அல்லது மூன்று அமெரிக்க இளைஞர்களும், ஒரு பிரிட்டன் பெண்ணும் பங்குபெற்றுள்ளதாக கென்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அமீனா முகமது தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும், சோமாலியா அல்லது அரேபியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
![kenya-attack[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/kenya-attack1.jpg?w=635&h=423)
Leave a comment