ஊழல் மிகுந்த அரசாங்கத்தை துரத்துவதே எமது நோக்கமாகும்- சரத்பொன்சேகா

General-Sarath-Fonseka-an-001[1]கொழும்பு: எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டு 5 மாதங்களே ஆகின்றன. ஆனால் வடமேல் , மத்திய மாகாண மக்கள் 5 உறுப்பினர்களை எமக்குப் பெற்றுத் தந்துள்ளனர். இரண்டு பிரதான கட்சிகளும் தங்கள் வாக்குகளை இழந்துள்ளன. ஆனால் நாம் புதிய வாக்கு வங்கியினை உருவாக்கியுள்ளோம் என்று ஜனநாயகக்கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்தார்.

குருநாகலை அல்பா விருந்தகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:-

மக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றி வந்தமையால்; புதிய அலையாக இம்முறை எம்மைத் தெரிவு செய்துள்ளனர். இந்த அரசாங்கம் நாட்டைச் சீரழித்து தீயவற்றையே புரிந்து வருகின்றது. இதை நிறுத்தும் நோக்கிலேயே நாம் அரசியலில் ஈடுபட்டு ஆரம்ப வெற்றியையைப் பெற்றுள்ளோம். எமது தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு பலமுறை அனுமதி கிடைக்கவில்லை. வயல்வெளிகளில் கூட்டங்களை நடத்தினோம்.வேட்பாளர்கள் தாக்கப்பட்டனர். வன்முறையை அரசாங்கத் தரப்பு பிரயோகித்தது.

இந்தத் தேர்தல் ஜனநாயக ரீதியில் நடைபெறவில்லை. ஒரு சர்வாதிகார ஆட்சியில் மக்களைப் பயமுறுத்தி நடைபெற்ற தேர்தல். ஊடகங்கள் எமக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி. ஊடகங்கள் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செயற்பட வேண்டும்.

நாம் பெற்ற இந்த வெற்றியின் மூலம் முதலாவது சக்தியாக வர எம் பயணத்தைத் தொடர உள்ளோம். கட்சிக் கொள்கைகளை ஏற்று வருபவர்களை நாம் ஏற்றுக் கொள்வோம். ஆனால் தனிப்பட்ட தேவைக்காக வருபவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த ஊழல் மிகுந்த அரசாங்கத்தை துரத்துவதே எமது நோக்கமாகும்.

Published by

Leave a comment