கொழும்பு: தம்புள்ள இந்து கோவில் சிலை உடைப்பை அரசுக்கு முட்டுக்கொடுக்கும் ‘லங்கா முஸ்லிம் காங்கிரசும், அ. இ. முஸ்லிம் காங்கிரசும் கண்டிப்பது என்பது சாத்தான் கூட்டம் வேதம் ஓதுவது போன்றதாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தம்புள்ளை பள்ளிவாயல் தாக்குதல் மூலம் இந்த நாட்டின் சிறுபான்மை இனங்களின் மதஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டு மிக மோசமான நிலைக்குள் இன்று நாடு தள்ளப்பட்டுள்ளது.
தம்புள்ள பள்ளியை தொடர்ந்து முஸ்லிம், இந்துக்களின் மத ஸ்தலங்கள் மீது பல தாக்குதல்கள் இடம் பெற்ற போதும்’ஒங்கப்பன் மவனே சிங்கம்டா’ என்பது போல் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், அ. இ. முஸ்லிம் காங்கிரசும் வீறாப்பு அறிக்கைகளை விட்டார்களே தவிர இவற்றை கட்டுப்படுத்த எது வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
காளி சிலையை உடைத்தவர்களை அரசாங்கம் கைது செய்யாமை பெரும் அவமானமாகும் என ஹக்கீம் சொல்கிறார். இது கண்டிக்கத்தக்க செயல் என அ. இ. மு. காவின் செயலாளர் அறிக்கை விடுகிறார். அரசாங்கம் எனும் போது இவர்களும் அதன் பங்காளிகள் தான் என்பதால் இவர்கள் ஆட்சியில் இருப்பதுதான் தமிழ் பேசும் மக்களுக்கு பாரிய அவமானமாகும்.
1980 களில் முஸ்லிம் சமூகம் பயங்கரவாத பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த போது அரசில் பங்காளிகளாக இருந்த முஸ்லிம் அமைச்சர்களும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என முஸ்லிம் மக்கள் அவர்களுக்கெதிராக களமிறங்கியதுடன் அவர்களை தேர்தலிலும் தோற்கடித்தார்கள். தாங்கள் அரச கட்சியின் அங்கததவர்களே தவிர அரசின் செயல்களுக்கு தாங்கள் பொறுப்பல்ல என முஸ்லிம் அமைச்சர்கள் கூறிய போதும், அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பவர்கள் என்பதால் அவர்களும் பொறுப்பே என முஸ்லிம் சமூகம் தெளிவாக கூறியது.
ஆனால் இன்று கட்சி ரீதியாகவே அரசுக்கு ஆதரவு வழங்கிக்கொண்டு முஸ்லிம்களுக்கெதிரான செயல்களுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்பதுபோல் முஸ்லிம் கட்சிகள் மக்களை ஏமாற்றுகின்றனர். சிலையை உடைத்தவர்கள் கைது செய்யப்படவில்லை என்றால் அதற்கு அரசு ஒத்துழைக்கின்றது என்பது அர்த்தமாயின் அரசு என்ற வகையில் இதற்கு முஸ்லிம் காங்கிரசும், அ. இ. மு. காங்கிரசும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்பதே அர்த்தமாகும். இதனை புரியாமல் இவர்கள் கண்டனம் தெரிவிப்பது வெட்கக்கேடானதாகும். இது பற்றி ஊடகங்களுக்கு தமிழில் அறிக்கை விடும் இவர்களின் கட்சியினர் ஏன் பாராளுமன்றத்தில் இது பற்றி கண்டித்துப்பேச அச்சப்படுகிறார்கள்?
பள்ளிகள், சிலைகள் உடைப்புக்கு துணை போகும் அரசுக்கு இவர்கள் முட்டுக்கொடுப்பதற்கு இந்த அரசாங்கம்தான் தொடர்ந்தும் இருக்கப்போகிறது என்று நியாயம் கூறி தங்களது பதவி வெறிக்கு முஸ்லிம் மக்களை இரையாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இறைவன் நாடினால் ஒரு கனப்பொழுதில் எந்த அரசையும் தலைகீழாக மாற்றுவான். அதற்கு முன் தொடர்ந்தும் ஏமாறும் மக்கள் மனம் மாற வேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் அறிவுறுத்தலாகும். இந்த அரசுதான் தொடர்ந்திருக்கும் என கூறுவது இறைவனை நம்பாத கூற்றாகும்.
ஆகவே, தம்பள்ள சிலையை உடைத்தவர்களை கைது செய்யாத அரசில் இருந்து கொண்டு இவற்றை கண்டிப்பது என்பது திருடர்களுடன் இருந்து அவர்களுக்கு உதவி செய்து கொண்டே திருட்டை கண்டிப்பது போன்ற கோமாளித்தனமாகும். இதைத்தான் சாத்தான் வேதம் ஓதுவது என்பார்கள். இத்தகைய சாத்தான்களுக்கெதிராக முஸ்லிம் தமிழ் மக்கள் தங்களது ஜனநாயக உரிமையான வாக்குகளை பாவிக்காத வரை இந்த சாத்தான்கள் தொடர்ந்தும் வேதம் ஓதிக்கொண்டுதான் இருக்கும்.

Leave a comment