மட்டக்களப்பு: ஊடகவியலாளர்கள் என்போர் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றவர்கள்.அவர்கள் எழுதும் எழுத்துக்கள் கொடுக்கும் குரல்கள் சமூகத்தின் எழுத்துக்களாகவும் சமூகத்தின் குரல்களாகவும் அமைய வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ.ஹில்மி முஹம்மத் தெரிவித்தார்.
‘மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்பு’ எனும் தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
முன்னைய ஒரு காலம் வெகுசன ஊடகம் மட்டும்தான் இருந்தது.ஆனால் இன்று அதைத் தாண்டி நவீன தொடர்பு சாதனங்கள் அதிகரித்துள்ளன.
பல் துலக்கக் கூடிய பற்தூரிகைகளின் எண்ணிக்கையை விட ஊடக சாதனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஒரு காலகட்டத்தில் ஊடகவியலாளர் என்பவர் மாவட்டம்,ஊர்,பிரதேசம் சம்பந்தப்பட்ட செய்திகளை சேகரித்து செய்தி தயாரிப்பவராக இருந்தார்.எனினும் இன்று அந்தக்காலம் மங்கிப் போய் வீட்டிலிருந்து கொண்டே முழுத் தகவலையும் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இணையம்,மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட நவீன தொலைத் தொடர்பு சாதனங்களின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு சமூகத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அந்த சமூகம் அறிவுறுத்தப்படுகின்ற முறையிலேதான் தங்கியுள்ளது.
நீங்கள் செய்திகளை எழுதும் போது எவ்வித பாரபட்சமுமின்றி உண்மையை உண்மையாக எழுத வேண்டும்.
இன்று இலங்கை அரசாங்கத்தின் ஜனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன.
அவற்றின் குறைகள் மற்றும் நிறைகள் இரண்டையும் எழுத வேண்டும்.
இன்று வெளியாகும் தமிழ்ப் பத்திரிகைகள் அபிவிருத்திட்டங்களின் குறைகளை மாத்திரம்தான் எழுதுகிறார்கள் என்றக் குற்றச்சாட்டு உள்ளது.
ஆனால் எங்களுக்கு குறைகளை எழுதலாம்.தவறில்லை.அதற்குச் சமமாக நிறைகளையும் எழுத வேண்டும்.
அது மாத்திரமல்லாமல் ஊடகவியலாளர்கள் பழைய தொனியில் செய்தியை மாத்திரம் எழுதக் கூடாது.
கட்டுரை, நேர்காணல், செவ்வி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் எழுதுவதன் மூலம் மக்களை நம்மில் கவர வைக்க வேண்டும்.
ஆகவே ஊடகத்துறையில் எம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் நாம் உண்மையை உண்மையாகவும் பொய்யை பொய்யாகவும் எழுதுவதுடன் ஒன்றின் குறைகளை மாத்திரம் எழுதாமல் அதன் நிறைகளையும் எழுத வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Leave a comment