லண்டன்: பிரிட்டனின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரும் உள்ளூர் லிவிசாம் பரோ கவுன்சிலும் தமிழ் இணையத்தளங்களில் புலிகள் இயக்கக் கொடி காண்பிக் கப்படுவதை தடை செய்துள்ளது. மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் மக்களுக்கு செய்யும் பணிகளை விளக்கிக் கூறுவதற்கு இந்த இணையத்தளங்கள் உதவுகின்றன.
உலகெங்கிலும் எல்.ரி.ரி.ஈ. இந்த புலிகள் கொடியை தனது சின்னமாக வைத்திருக்கின்றது. பொலிஸார் மக்களுக்கு செய்யும் சேவையை தெளிவாக விளக்கும் முகமாகவே புலிகள் கொடியுடனான இந்த இணையத்தளம் அமைக்கப்பட்டிருந்தது.
லண்டனில் உள்ள இலங்கையின் உயர் ஸ்தானிகராலயமும் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும் இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்தே லண்டனின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரும் லிவிசாம் பரோ கவுன்சிலும் புலிகள் கொடியை அகற்றுவது என்று முடிவெடுத்தன.
மற்ற நாடுகள் தங்கள் இணையத்தளங்களுக்கு தேசியக் கொடியை சேர்த்துக் கொள்ளும் போது இந்த இணையத்தளத்தில் புலிகள் கொடியை சேர்த்துக் கொண்டது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டது. இந்த முறைப்பாட்டை அடுத்து லிவிசாம் பரோ கவுன்சிலின் மேயர் ஸ்டீவ் புளொக் உடனடியாக இந்த தவறை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தார்.
மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரும் இது விடயத்தில் தவறிழைத்து விட்டதாக மேயர் குற்றம் சாட்டுகிறார். இதனால், லண்டன் பொலிஸார் இப்போது தங்கள் நாட்டினால் உத்தியோகபூர்வமாக தடை செய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ.யின் கொடிதான் இந்த புலிக் கொடி என்பதை சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளனர்.
இந்த தீர்மானத்தை அடுத்து இரு இணையத்தளங்களில் இருந்து புலிகள் கொடி உடனடியாக அகற்றப்பட்டது.
உலகெங்கிலும் பரந்துவாழும் சுமார் 80 மில்லியன் தமிழர்கள் தங்களுக்கென ஒரு தனியான கொடியை விரும்புகிறார்கள் என்று லண்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
– தினகரன்
Leave a comment