மன்னார்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடமாகாண மக்களுக்கு பெரும் துரோகத்தனத்தை செய்வதாகவும்அக்கட்சியினை இம்மாவட்டத்திலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்..சுபைர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் ரசூல் புதுவெளிக் கிராமத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் கூறியதாவது –
இன்று கிராமங்களுக்கு வந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் உண்மைக்கு புறம்பான விடயங்களை கூறி மக்களை பிழையாக வழிநடத்துகின்றார்.வடக்கில் இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் இருக்கும் முஸ்லிம்களை மீள்குடியேற்றுங்கள் என்று அவரிடம் சொன்ன போது, அதனை கண்டுகொள்ளாமல் இருக்கின்றார். அவருக்கு முஸ்லிம்களது நலனில் அக்கறையில்லை. வடக்கில் எத்தனை ஆயிரம் முஸ்லிம்கள் அகதிகளானார்கள் என்று கேட்டால் கூட அதற்கு பதிலளிக்க முடியாது.
எமது கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் அரசியல் ஞானம் கொண்டவர், அவரின் வியூகத்தால் கிழக்கில் 3 மாகாண சபை உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து. இந்த வன்னி மகள் எமது மாவட்ட மக்களுக்கு மாகாண சபை பிரதி நிதித்துவத்தை பெற்றுத் தர முடியுமானால் மன்னார் மாவட்டத்தில் மூன்று ஆளும் கட்சி ஆசனங்களை மிகவும் இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும்.
அன்று இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி மாபெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள், இந்த சமூகத்தின் விடுதலை ஊரைநோக்கிய பயணத்திற்காக பஸ்ஸின் சாரதியாக இருந்தார். இந்த பஸ் பிழையான பாதையில் பயணிக்கும் போது அவற்றை ஒரு போதும் இலக்கை நோக்கி செலுத்த முடியாது என்பதை தெளிவாக சொல்லியிருக்கின்றார்.
இந்த கட்சியின் ஸ்தாபகர்களை பலரை தற்போதைய தலைவராக இருக்கின்ற ரவூப் ஹக்கீம் அவர்கள் வெளியேற்றிவிட்டார் என்று கூறிய பிரதி தலைவர் சுபைர், முஸ்லிம் காங்கிரஸின் பல உறுப்பினர்கள் இன்று எமது தலைவரின் கரத்தை பலப்படுத்த இணைவதாகவும் கூறினார்.

![DSC_0011[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/dsc_00111.jpg?w=640&h=360)

Leave a comment