மன்னார்: விளையாட்டுப் போட்டிகளில் விண், ஸ்பேஸ் என்கின்ற ஒரு சூத்திரம் இருக்கின்றது. இம்முறை இந்த தேர்தலில் அந்த சூத்திரம் எமக்கு சாதகமாக அமையும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கில் இந்த தேர்தலில் வடக்கு மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையே வெற்றியளிக்கச் செய்வார்கள் என்றும் கூறினார். மன்னார் பொது விளையாட்டு மைதனாத்தில் இன்று இடம் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, ராஜித சேனாரத்ன, பிரதி அமைச்சர்களான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், சரத் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாருக், பிரபா கணேஷன், வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, கிழக்கு மாகாண சபை பிரதி முதல்வர் எம்.எஸ்.சுபைர் உட்பட ஆகியோருடன், பெரும் எண்ணிக்ககையிலான பொது மக்கள் இதன் போது சமூகமளித்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னால் பிரதி தலைவர் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்டோர் ஜனாதிபதியினை சந்தித்து தாங்கள் ஆளும் கட்சியின் வெற்றிக்கு உதவி புரிவாதாக தெரிவித்தனர். மேலும் ஜனாதிபதி தமதுரையில் கூறியதாவது…,
விடுதலைப் புலிகளின் காலத்தில் மதத்தளங்கள் உடைக்கப்பட்ட போது அது குறித்து எதையும் பேசவில்லை. ஆனால், நாங்கள் மதத்தளங்களை உடைப்பவர்கள் அல்ல, மாறாக பள்ளிகளையும், விகாரைகளையும், கோவில்களையும் கட்டுபவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு இனவாதத்தையும், மதவாதத்தையும் பேசி அரசியல் செய்கின்றனர். யுத்தம் 30 வருடம் இடம் பெற்றது. அதனால் நாம் இழந்தவைகள் ஏராளம். ஆனால், அபிவிருத்தியின் 4 வருடமே, இதில் சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நாம் மேம்படுத்திவருகின்றோம்.
கட்டிடங்களையும், சொத்துக்களையும் அழிப்பது என்பது இலகுவானதாகும்.ஆனால், அவற்றை நிர்மாணிப்பது என்பது கடினமாகும். யுத்தத்தில் இழந்த உயிர்களை தவிர மற்றைய எல்லாவற்றையும் நாம் வழங்குவோம். 2005, 2010 ஆம் ஆண்டுகளில் இடம் பெற்ற தேர்தல்களில் வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்திலேயே அதிகமான வாக்குகள் எமக்களிக்கப்பட்டன. அன்று எவ்வாறு அதனை பெற்றுத்தருவதில் அமைச்சர் றிசாத் பதியுதீன் பாடுபட்டாரோ, அதை விட மேலாக இன்றைய இந்த கூட்டத்தை பார்க்கின்றேன்.
தமிழ் மக்களை பிழையாக புலிகள் வழிநடத்தியதால் அவர்கள் இழந்தவைகைளை நாம் பார்க்கின்றோம். கால்கள், கைகள் மற்றும் உறுப்புக்களை இழந்த இளைஞர்கள் எம்முடன் இணைந்துள்ளனர்.அவர்களது நோக்கம் அபிவிருத்தியாகும். அதனை நாம் செய்தும் வருகின்றோம். எதிர்காலத்தில் இந்த அபிவிருத்திகள் தொடரும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Leave a comment