– OiT
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் குற்றவாளிகள் என்று விரைவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி இரவு ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி ‘மைனர்’ உள்பட 6 பேரால் கற்பழித்து தாக்கப்பட்டதில் இறந்தார்.அவருடன் இருந்த ஆண் நண்பரும் தாக்கப்பட்டார்.
இந்த வழக்கில் அந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அதில் ‘மைனரு’க்கு சிறார் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. மீதமுள்ள 4 பேரும் குற்றவாளிகள் என்று இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி விரைவு நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. 5 பேரில் ஒருவனான பேருந்து டிரைவர் ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 6 பேரின் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.
ராம் சிங்:
பேருந்து டிரைவரான ராம் சிங் (33), ரவி தாஸ் குடிசைப் பகுதியில் வசித்து வந்தான். அவனுடைய மனைவி இறந்துவிட்டார். சம்பவம் நடந்த அன்று அவன் தான் பேருந்தை ஓட்டினான். அவன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்வான் என்று அவனது அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிவித்தனர்.
கற்பழிப்பு வழக்கில் கைதான அவன் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். அவனது குடும்பத்தார் பிழைப்பு தேடி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து டெல்லி வந்தனர். 5 சகோதரர்களில் ஒருவனான ராம்சிங் துவக்கப் பள்ளியில் படிக்கும்போதே படிப்பை நிறுத்திவிட்டான்.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த விபத்தில் ராம் சிங்கின் வலது கையில் சேதம் ஏற்பட்டது என்றும், அதனால் ஒரு கையைத் தான் அவனால் சரியாக பயன்படுத்த முடியும் என்றும் அவனது தந்தை மங்கேலால் சிங் தெரிவித்தார். அப்படி இருக்கையில் ஒரு கையால் ராம் சிங்கால் எப்படி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்ள முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முகேஷ் சிங்:
ராம் சிங்கின் தம்பி முகேஷ் சிங். அவன் தனது அண்ணனுடன் தங்கிக் கொண்டு பேருந்தில் உதவியாளராக இருந்தான். அவன் மீது பிஸியோதரபி மாணவியை கற்பழித்து தாக்கியது, அவரது ஆண் நண்பரை இரும்புக் கம்பியால் தாக்கியது ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டன. அந்த மாணவியும், அவரது நண்பரும் பேருந்தில் ஏறியபோது அதை முகேஷ் தான் ஓட்டியதாக கூறப்படுகிறது. தான் பேருந்தை ஓட்டியதாகவும் மீதமுள்ள 5 பேர் மாணவியை கற்பழித்ததாகவும் முகேஷ் நீதிமன்றத்தில் தெரிவித்தான்.
வினய் சர்மா
ராம் சிங் வீட்டுக்கு அருகே வசித்த வினய் சர்மா (20) ஜிம் உதவியாளராகவும், பிட்னஸ் பயிற்சியாளராகவும் இருந்துள்ளான். கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் இவன் மட்டும் தான் பள்ளிப் படிப்பை படித்துள்ளான். இவனுக்கு மட்டும் தான் ஆங்கிலத்தில் பேசத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தன்று தான் டெல்லியில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாக வினய் தெரிவித்தான். மேலும் இந்திய விமானப் படையில் கிளார்க் பணிக்கு தேர்வு எழுதவிருக்கும் தனக்கு சிறையில் சத்தான உணவு வழங்க வேண்டும் என்று அவன் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தான்.
அக்ஷய் தாகூர்
பீகாரைச் சேர்ந்தவன் அக்ஷய் தாகூர் (28). பேருந்து உதவியாளர். கற்பழிப்பு வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி பீகாரில் வைத்து கைது செய்யப்பட்டான். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய அவன் கடந்த ஆண்டு டெல்லிக்கு சென்றுள்ளான். அவனுக்கு மனைவியும்இ மகனும் உள்ளனர். அவர்கள் பீகாரில் வசித்து வருகின்றனர். சம்பவத்திற்கு முந்தைய நாளே தான் பீகாருக்கு சென்றுவிட்டதாக அவன் நீதிமன்றத்தில் தெரிவித்தான்.
பவன் குப்தா:
பவன் குப்தா (19) ஒரு பழ வியாபாரி. சம்பவத்தன்று தானும்இ மற்றொரு குற்றவாளியான வினய் சர்மாவும் இசை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதாக அவன் தெரிவித்தான். ஆனால் கைது செய்யப்பட்ட சில நாட்களில் அவன் நீதிமன்றத்தில் ஆஜரானபோது தான் ஒரு கொடூர செயலை செய்துவிட்டதாகவும்இ தன்னை தூக்கிலிடுமாறும் தெரிவித்ததாக செய்திகள் வந்தன. ஆனால் இதை அவனது வழக்கறிஞர் பின்னர் மறுத்துவிட்டார்.
6வது குற்றவாளியான மைனரின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவம் நடந்தபோது அவனுக்கு வயது 17. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அவன் 11 வயதில் டெல்லிக்கு வந்து சின்ன சின்ன வேலைகள் செய்துள்ளான். அவனது பெற்றோருக்கு மொத்தம் 6 குழந்தைகள். அதில் இவன் தான் மூத்தவன். அவன் டெல்லிக்கு கிளம்பும் முன்பு தான் அவனுடன் கடைசியாக பேசியதாக அவனது தாயார் தெரிவித்தார்.
டிசம்பர் மாதம் அவனைத் தேடி பொலீசார் வரும்வரை அவன் இறந்துவிட்டதாக நினைத்தோம் என்று அவர் மேலும் தெரிவித்தார். அவனது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அவனது தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர். அவன் சில ஆண்டுகள் வீட்டுக்கு பணம் அனுப்பிவிட்டு பின்னர் காணாமல் போய்விட்டான் என்று கூறப்படுகிறது.
அவன் மிகவும் நல்லவன் என்றும், டெல்லியில் கெட்ட சகவாசத்தால் தான் குற்றச் செயலில் ஈடுபட்டிருப்பான் என்றும் அவன் தாயார் தெரிவித்தார்.





Leave a comment