பழுலுல்லாஹ் பர்ஹான்
யாழ்ப்பாணம்: முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்குவதற்கும் நிலையான வேதனத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இன்றைய தினம் (8) இடம்பெற்ற வடமாகாண முன்பள்ளி கல்வி டிப்ளோமா பட்;டம் பெற்ற ஆசிரியர்களுக்கான பட்டமளித்து சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று இலங்கையில் மட்டுமல்லாது உலகில் கல்வித்துறை முக்கியபங்கை வகித்து வருகின்றது. மனிதவாழ்வில் குழந்தை பருவத்திலேயே ஆரம்பகல்வி ஊட்டப்பட வேண்டியது அவசியமாகும். கடந்த காலங்களில் முன்பள்ளி மற்றும் ஏனைய கல்வித்துறைகளை உற்றுநோக்கும் போது முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்நிலையில் யார் எதைச் சொன்னாலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்பள்ளி கல்வி செயற்றிட்டத்தை மென் மேலும் கட்டியெழுப்ப வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.
இதனால் தான் 2011 ஆம் ஆண்டு ஜனாதிபதி; முன்பள்ளிகளது பௌதீக மற்றும் ஏனைய வளங்களை மேம்படுத்தும் பொருட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இதனையடுத்து நாம் எமது அமைச்சினூடாக பல்வேறு செயற்திட்டங்களையும் கல்விசார்ந்த உதவித்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.
இந்நாட்டில் சுதந்திர கல்வித்திட்டத்தின் கீழ் பாடசாலை முதல் பல்கலைக்கழகங்கள் வரை இணைக்கப்பட்டுள்ளபோதிலும் முன்பள்ளிகள் இத்திட்டத்தில் இணைக்கப்படாதுள்ளன. இந்நிலையில், வடமாகாணத்தில் முன்பள்ளி கல்விசெயற்திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்கும் வகையில் 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கொள்கை திட்டத்திற்கு அமைவாக முன்பள்ளிகளுக்கான உதவிகளை வழங்கியும் ஆசியர்களுக்கான வேதனங்களை வழங்கியும் வருகின்றோம்.
அத்துடன், கடந்த 30 வருடகாலமாக வடமாகாண மக்களது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கோரிக்கைக்கு அமைவாக முன்பள்ளி கல்வித்துறை மேம்பாடு உள்ளிட்ட செயற்திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் சில அரசியல்வாதிகள் முன்பள்ளி மேம்பாட்டையும் அதன் அபிவிருத்தியையும் சிதைக்கும் வகையிலான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட வருவதாக கூறிவருகின்றார்கள். இவ்வாறான புரளிகளை கிழப்பி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்பள்ளி கல்வி செயற்பாடுகளை படு பாதாளத்திற்குள் தள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்;டலுக்கு அமைவாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையின் கீழ் தொடர்ந்தும் நாம் முன்பள்ளி கல்விசார் செயற்திட்டத்தை முன்னெடுக்கும் அதேவேளை, வடமாகாண சபைத் தேர்தலில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் முன்பள்ளி ஆசிரியர்களது வீழ்ச்சிக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நல்ல அறிவுஜீவிகளை கல்விமான்களை உருவாக்குகின்றவர்கள் என்றவகையில் உங்களை நான் மதிக்கின்றேன் என்பதுடன் உங்களது மனநிலையையும் தொழிலையும் நிச்சயம் பாதுகாப்போம் என்றும் இவ் ஆசிரியர் தொழில்துறையை நிரந்தரமாக்குவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்றும் உறுதிபடத்தெரிவித்தார்.
எனவே நீங்கள் பொய்யான வதந்திகளுக்கோ தகவல்களுக்கோ ஒருபோதும் இடமளிக்க வேண்டாமென்றும் புத்திசாதுரியமாக நடந்து கொள்ள வேண்டுமென்பதுடன், முன்பள்ளி சிறார்களுக்கு நல்ல பயிற்சிகளை வழங்கும் அதேவேளை, ஒழுக்கம் நிறைந்த திறமையுள்ள சமூகமாகவும் உருவாக்க வேண்டும். அதேபோன்றுதான் நீங்களும் முன்னூதாரணமாக திகழவேண்டும்.
இன்று நீங்கள் நல்லதொரு உயர்ந்தநிலையை அடைந்துள்ளீர்கள். அந்தவகையில், உங்களது வளர்ச்சிக்கும், முயற்சிக்குமாக அயராது பாடுபட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தொழில் பாதுகாப்பின் ஊடாக நீங்கள் வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டுமென்றும், அதற்காக சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நானும் பக்கபலமாக இருப்பேன் என்றும் சுட்டிக்காட்டினார். 





Leave a comment