ரியாத்: இஸ்ரேல்தான் அமெரிக்காவின் கள்ளக் குழந்தை என பள்ளிப்பருவம் முதல் இன்றுவரை எழுதப்படாத பாடமாக எங்கள் மனங்களில் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறோம். இஸ்ரேல் என்னதான் பலஸ்தீனத்தைத் தாக்கினாலும், காஸாவை அழித்தாலும் சவூதிக்கு எந்த அக்கரையும் இல்லை! உலக முஸ்லிம்களுக்கு மக்கா-மதீனா புனிதஸ்தளங்களில் பிரார்த்தனை புரிய வேண்டுமாயினும் மன்னரின் அனுமதி இமாமுக்குத் தேவை.
இவ்வாறு அமெரிக்காவுடன் நேரடியாகவும், இஸ்ரேலுடன் மறைமுகமாகவும் உறவாடிவரும் சவூதி அரேபியாவின் சரித்திரத்தை நாம் தெரிந்திருக்கவேண்டும்!
எண்ணெய் வர்த்தகம் என்பது உலகளவில் டொலரில் மட்டுமே நடக்கும் ஒரு வியாபாரம். எண்ணெய்யை வளைகுடா நாடுகளே மிக அதிக அளவில் உற்பத்தி செய்தாலும் கூட அதன் விலையை நிர்ணயிப்பது லண்டன் பங்குச் சந்தை தான். இங்கு தான் சர்வதேச அளவிலான காரணிகளை வைத்து எண்ணெய்க்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகள் தங்களுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு டொலரையே பொது ‘கரன்சி’யாக பயன்படுத்தி வருகின்றன.
ஹிட்லர் கொல்லப்பட்டு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நேரம். அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் சூடு பிடித்து, கார்கள் உற்பத்தியும் விற்பனையும் உச்சத்தை அடைந்த நேரம். உலகிலேயே மிக அதிகமான எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இருந்தாலும் அமெரிக்காவிலேயே எரிபொருளுக்கு தட்டுப்பாடு… தனது எதிர்காலம் எண்ணெய்யின் வரத்துடன் சார்ந்து இருப்பதை அமெரிக்கா உணர்ந்த நேரம். அதே நேரத்தில் சவூதி அரேபியாவில் தான் உலகிலேயே மிக அதிகமான எண்ணெய் இருப்பு உள்ளதாக கண்டறியப்பட்ட நேரம்.
இந் நிலையில், அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் எகிப்துக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான ரெட் சீ பகுதிக்கு ரகசியமாய் செல்கிறார். அங்கு நிலைநிறுத்தப்பட்டிருந்த போர்க் கப்பலில் ரூஸ்வெல்ட் மற்றும் அப்போதைய சவூதி அரேபிய மன்னர் இப்ன் செளத் இருவரும் சந்தித்துப் பேசுகின்றனர்.
அமெரிக்காவுக்கு தடையில்லாத எண்ணெய் ‘சப்ளை’ வேண்டும். இதை செளதி அரேபியா நிறைவேற்றித் தர வேண்டும் என்ற ரூஸ்வெல்ட்டின் கோரிக்கையை இப்ன் செளத் மெளனமாய் கேட்கிறார்.
இதைச் செய்தால், உங்களது பரம்பரையே செளதியில் தொடர்ந்து எந்த சிக்கலும் இல்லாமல் ஆட்சியில் இருக்க அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என்ற வாக்குறுதி தரப்படுகிறது. அமெரிக்க ராணுவம் எப்போதும் செளதிக்கு (மன்னர் குடும்பத்துக்கு) ஆதரவாய் இருக்கும், உங்களுக்கு எந்த ஆபத்து வந்தாலும் நாங்கள் வருவோம் என்கிறார் ரூஸ்வெல்ட். ஆனால், நீங்கள் தரும் எண்ணெய்க்கான பணத்தை நாங்கள் டொலர்களில் வழங்குவோம் என்கிறார். (அதற்கு முன் சர்வதேச வர்த்தம் பல்வேறு நாடுகளின் கரன்சிகளிலும் தங்கத்தையும் அடிப்படையாக வைத்து நடந்து வந்தது).
இதை சவூதி மன்னர் ஏற்றுக் கொள்ள உலகின் மாபெரும் வர்த்தகம் (எண்ணெய்) டொலர்களில் ஆரம்பிக்கிறது. இதன் பின்னர் உலகளவிலான பெரும்பாலான வியாபாரம் டாலர்களுக்கு மாறுகிறது. இப்படித்தான் டொலரின் ஆதிக்கம் உலகில் ஆரம்பமானது. எல்லா நாடுகளும் தங்களது வேண்டியதை இறக்குமதி செய்ய டொலர்களை சேமித்து வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
இந் நிலையில் 1970ம் ஆண்டில் டொலரின் மதிப்பு திடீரென சரிந்தது. இதனால் எண்ணெய்யை விற்று விற்று டொலர்களைக் குவித்து வைத்திருந்த வளைகுடா நாடுகளுக்கு பெரும் சிக்கல். அவர்களது அன்னிய செலாவணி கையிருப்பு (டொலர்கள்) வீங்கிப் போய், பலவீனமான நிலைக்குப் போனது.
இதையடுத்து சில வளைகுடா நாடுகள் இனியும் டொலரை மையமாக வைத்து எண்ணெய் வர்த்தம் செய்வது தவறு, இதை பல்வேறு கரன்சிகள் அடங்கிய வர்த்தகமாக மாற்ற வேண்டும் என்று குரல் தந்தன. குறிப்பாக, ஈரான், கத்தார், இராக், யுஏஇ, வெனிசுவேலா ஆகியவை ஆதரித்தன.
ஆனால், உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவூதி அரேபியா இதை ஏற்கவில்லை. காரணம், சவூதியில் அவ்வளவு டொலர்கள் இருந்தது தான். எண்ணெய் வர்த்தகத்தை மற்ற கரன்சிகளுக்கு மாற்றினால் அதனிடம் இருப்பில் உள்ள டொலர்களின் மதிப்பு பெருமளவில் சரிந்துவிடும். இது ஒரு குறுகிய கால பிரச்சனை தான். இருந்தாலும் அந்த ‘ரிஸ்க்’கை சவூதி எடுக்கவில்லை. இதற்கு இன்னொரு முக்கிய காரணம், அமெரிக்காவை பகைக்க விரும்பாதது.
இதை இன்னும் விளக்க வேண்டுமானால்… ரூஸ்வெல்ட் தந்த உறுதிமொழிப்படி சவூதி அரச குடும்பத்துக்கு இன்று வரை உறுதுணையாக நிற்கிறது அமெரிக்கா. சவூதியில் ஜனநாயகம் தளைக்க வேண்டும் என்றெல்லாம் அமெரிக்கா பேசுவதில்லை. அதே போல இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கோபம் வரும் அளவுக்கு, சவூதியும் மூக்கை நுழைப்பதில்லை.
இப்படியே பல ஆண்டுகளாய் டொலர்களிலேயே வர்த்தகத்தைத் தொடர்ந்து, தொடர்ந்து இன்று என்ன நிலைமை என்றால் டொலரின் மதிப்பைக் காப்பாற்ற அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரயத்தனப்படுவது சவூதி அரேபியா தான் என்ற நிலை வந்துவிட்டது. 1980 நிலைமையின்படி சவூதி அரேபியாவின் வருவாயில் 90 சதவீதம் டொலர்கள் தான். அதே போல சவூதி அரேபியாவின் முதலீடுகளில் 83 சதவீதம் டொலர்களாகவே இருந்தன. இப்போதும் நிலைமை அதே. இதனால், டொலர்களின் மதிப்பை காக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவை விட சவூதிக்கே அதிகம் என்ற நிலைமை வந்துவிட்டது.
1990 வளைகுடா யுத்தத்தில் சவூதிக்குள் காலடி வைத்த ஈராக் படையை வெளியேற அமெரிக்கா சதாம் ஹூஸைனைக் கேட்டது.
அதற்கு சதாம் அமெரிக்காவுக்கு சொன்ன வார்த்தை ஒன்றுதான்
‘பலஸ்தீனில் இருந்து இஸ்ரேலை வெளியேறச் சொல்லுங்கள், நாங்கள் சவூதியிலிருந்து வெளியேறுகிறோம்.’
இதேபோல் ஈரானின் இன்றைய கோரிக்கையும் இஸ்ரேலை விரட்டி பலஸ்தீனைக் கைப்பற்ற வேண்டும் என்பதே.
எனினும் உண்மையை அறியாமல் நாங்கள் ஷியா என்றும், சுன்னி என்றும் வெட்டி வீழ்த்துகிறோம். குளிர்காய்வது அமெரிக்காவும், இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் என்பது இன்னும் எத்தனை பேருக்குத் தெரியும்!


![110131_saudi[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/09/110131_saudi1.jpg?w=280&h=175)
Leave a comment