ஒஹையோ: அமெரிக்காவின் ஒஹையோ மாகாணத்தில் மூன்று பெண்களைக் கடத்தி வைத்து , அவர்களைப் பாலியல் அடிமைகளாக சுமார் பத்தாண்டுகள் பயன்படுத்திய, ஏரியல் கேஸ்ட்ரோ என்பவர், அவர் சிறை வைக்கப்பட்டிருந்த அறையில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக அம்மாகாண சிறைத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அவரை உயிர்ப்பிக்க எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததாகவும், அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
அவர் கடத்திவைத்திருந்த பெண்களில் ஒருவர் தப்பி வெளியே வந்து உதவி கேட்டு குரல் கொடுத்த நிலையில், கேஸ்ட்ரோ மே மாதம் கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் அவர் மீது சுமத்தப்பட்ட, சுமார் 900 பாலியல் வல்லுறவு, ஆட்கடத்தல், கொலைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு ஆயுள் தண்டனையும், அதற்கு மேலதிகமாக ஆயிரம் ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அவர் விடுதலை செய்வதற்கு மிகவும் ஆபத்தானவர் என்று நீதிமன்றம் கூறியது.
க்ளீவ்லண்ட் நகரில் இருந்த அவரது வீடும் இந்த சம்பவத்துக்கு சற்று பின்னர் இடித்துத் தள்ளப்பட்டது.
– BBC
Leave a comment