வடக்கில் வாழ்ந்த அனைத்து மக்களையும் அவர்களது சொந்த மண்ணில் கெளரவமாக வாழச் செய்வதே எனது நோக்கமாகும்- றிசாத் பதியுதீன்

rishad– இர்ஷாத் றஹ்மத்துல்லா

தலைமன்னார்: வடக்கில் வாழ்ந்த அனைத்து மக்களையும் அவர்களது சொந்த மண்ணில் கெளரவமாக வாழச் செய்வதே எனது நோக்கமாகும். அவற்றை இலக்காக கொண்டே எனது பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என்று தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் மக்கள் அபிவிருத்திகளை நோக்கி தற்போது செல்வதாகவும் கூறினார்.

தலைமன்னாரில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமன்னார் அமைப்ளார் ஏ.ஜே.றாசிக் பரீத் தலைமையில் இடம் பெற்ற இந்த கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில் –

இன்று இம்மாவட்டம் சகல துறைகளிலும், முன்னேற்றம் கண்டுவருகின்றது.மக்கள் தெளிவான சிந்தனையுடன் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.எமது கிராமம், எமது மாவட்டம் ஏனைய மாவட்டங்களை போன்று அபிவிருத்தி காணவேண்டும் என்ற ஆர்வம் காணப்படுகின்றது.

இவ்வாறான சிந்தணைகளின் மூலம் தான் நாம் இழந்தவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.எனது அரசியல் காலப்பகுதியில் எவ்வித இனபாகுபாடுகளை முன் வைத்து செயற்பட்டதில்லை. தமிழர்காளக இருந்தால் என்ன இஸ்லாமியர்களாக இருந்தால் என்ன அவர்களது தேவைகள் பொதுவானது. அதனை பெற்றுக் கொடுப்பதற்காக இந்த அரசாங்கத்தில் நாங்கள் இருக்கின்றோம்.

ஆனால் சில கட்சிகள் மக்களது அபிவிருத்திகளை விரும்பாத நிலையில் அவர்களை தொடர்ந்தும் ஏமாற்று அரசியல் சித்தாந்தங்களை கூறி, அரசியல் வறுமையினை தோற்றுவிக்கின்றனர். தமக்கான தகுதி வாய்ந்த தலைமைகளை உருவாக்கவிடாமல் அதற்கு இடையூறினை செய்கின்றனர்.

எனவே இவ்வாறான வங்குரோத்து அரசியல் முகங்களை இந்த இந்த தேர்தலில் இனம் காட்ட வேண்டும்.

இலங்கையின் மன்னார் மாவட்டம் இந்தியாவுக்கு அருகில் அமைந்துள்ளது. குறிப்பாக தலைமன்னார் பிரதேசம் இராமேஸ்வரத்தை அண்டிய கடல் எல்லையில் உள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான கப்பல் சேவை இடம் பெறும் போது இந்த மண்ணின் மகிமையினை எல்லோரும் அறிந்து கொள்வர் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.

rishad

DSC_3596[1]

Published by

Leave a comment