கொழும்பு: இலங்கை முஸ்லிம்கள் அண்மைக்காலமாக எதிர் நோக்கும் பள்ளிவாயல் உடைப்பு போன்ற மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான விபரங்களை கொழும்பிலுள்ள ஐ நா காரியாலயம் மூலமாக நவநீதம் பிள்ளையின் கவனத்திற்கு முஸ்லிம் மக்கள் கட்சி கொண்டு வந்துள்ளது.
இது சம்பந்தமாக முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத்தினால் ஆங்கில மொழி மூலம் நவநீதம் பிள்ளையிடம் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,
முதலில் தங்களின் எமது நாட்டுக்கான வருகையையிட்டு நாம் எமது மகிழ்வை தெரிவிப்பதுடன் தங்களை மனம் திறந்து வரவேற்கின்றோம். இலங்கை நாட்டின் பூர்வீக குடிகளான முஸ்லிம்கள் பண்டைய வரலாறு தொடக்கம் இந்த நாட்டின் பாரம் பரிய மக்களாக வாழ்ந்து வருகிறார்கள். தமது ஆதி பிதாவானஆதம் வாழ்ந்த இந்தப்பூமியில் சமாதானம் நிலைத்து சகல இன மக்களும் சகோதரர்களாக வாழ வேண்டும் என்பதில் இந்த நாட்டு முஸ்லிம்கள் மிகவும் அக்கறையுடன் வாழ்ந்து வருகிறார்கள். பொறுமை, சக வாழ்வு, அனைத்து இனமக்களுடனும் புரிந்துணர்வு என்ற உயரிய குணங்களுடன் இந்நாட்டு முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.
கடந்த யுத்த காலத்தின் போது முஸ்லிம்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட போதும் தம்மை பாதிப்புக்குள்ளாக்கிய மக்களுடன் கூட யுத்தம் செய்யாமல் பொறுமையாக வாழ்ந்ததை காண்கிறோம். வடக்கிலிருந்து ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் அனைத்தையும் இழந்து வெளியேற்றப்பட்ட போதும் தமக்கு அநீதி இழைத்தவர்களுக்கெதிராக அவர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. அந்தளவிற்கு இந்நாட்டு முஸ்லிம் மக்கள் மிகுந்த சகிப்புத்தன்மை கொண்டவர்கள்.
நாட்டின் ஐக்கியம் கருதி பிரிவினைவாதத்திற்கு துணை போகாமல் அதே வேளை தமிழ் பேசும் மக்கக்கான நியாயமான தீர்வு வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டவர்களாக சிங்கள மற்றும் தமிழ் மக்களுடன் இணைந்தே வாழ்ந்து வருகிறார்கள். அப்படியிருந்தும் யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்தும் இலங்கை முஸ்லிம்கள் பாரிய மனித உரிமை மீறல்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள் என்பதை வேதனையுடன் நாம் நோக்குகிறோம்.
எமது கட்சி கடந்த 2005 ஜனாதிபதி தேர்தலில் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கியதுடன் அவருக்கு ஆதரவாக எந்த வித சலுகையையும் அவரிடம் பெறாது ஆதரவளித்து வந்தது. ஆனாலும் கடந்த வருடம் தம்புள்ள பள்ளிவாயல் மீதான தாக்குதல், மற்றும் தெஹிவல பள்ளிவாயல் மீதான தாக்குதல், அவற்றை செய்தோர் எவரையும் கைது செய்யாமை என்ற காரணங்கள் காரணமாக நாம் அரசுக்கு ஆதரவான நிலையிலிருந்து வெளியேறினோம். அதனை தொடர்ந்து எமது சமூகத்துக்கான உரிமைக்குரலாக நாம் செயற்பட்டு வருகிறோம். எமது இந்தப்பணியில் எமக்கு பல மரண அச்சுறுத்தல்கள், பொலிஸ் விசாரணை என பல விடயங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம்.
ஆனாலும் நாம் நேசிக்கும் இந்த நாட்டில் சகல மக்களும் சகல உரிமைகளும் பெற்று சமாதானமாக வாழ வேண்டும் என்ற அக்கறையின் காரணமாக இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம் என்று குறிப்பிட்டு அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களாக,
தம்புள்ள பள்ளிவாயல் தொடக்கம் இது வரை சுமார் 24 பள்ளிவாயல்கள் சிங்கள இனவாதிகளினால் தாக்கப்பட்டுள்ளன. ஐ நா வின் மனித உரிமை சாசனத்தின் பிரகாரம் ஒவ்வொரு மனிதனும் தனது மதத்தை செயற்படுத்துவதற்கு பூரண உரித்துள்ளவன் என்ற வகையில் முஸ்லிம்களின் பள்ளிவாயல் மீதான தாக்குதல்கள் பாரிய மனித உரிமை மீறலாகும். இது சம்பந்தமாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனித்துப்போயிருந்த வெட்கக்கேட்டையும் இங்கு வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம். தாக்கப்பட்ட பள்ளிவாயல்கள் மற்றும் அது சம்பந்தமான எமது அறிக்கைகள்; அடங்கிய தேசிய பத்திரிகைகளின் செய்திகளை இத்துடன் இணைத்துள்ளோம்.
மேலும், முஸ்லிம்கள் தமது உணவுகளை சுத்தமாகவும், தமது சமயம் சொல்லும் வழிமுறை பிரகாரம் பேணுதலாக உண்பதற்கும் எமது சமயத்தலைவர்களினால் வழி வகுக்கப்பட்ட ஹலால் எனும் சான்றுப்பத்திரம் இனவாதிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அரசாங்கத்தால் ஒழிக்கப்பட்டது. இது விடயத்திலும் முஸ்லிம்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாலாதவர்களாகவே இருந்தனர். இந்த நிலையில் இது விடயத்தில் ஐ நா தலையிட்டு இந்த உரிமையை எமக்கு மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.
அடுமட்டுமன்றி முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைக்கெதிரான இனவாதிகளின் கருத்துக்கள் தினமும் வளர்ந்து வருகின்றன. ஓர் இனத்தின் பெண்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் பெண்களின் உரிமைகளுக்கெதிரானவை என்பதில் சந்தேகம் இல்லை. இத்தகைய இனவாத கருத்துக்களை அரசாங்கமும் கட்டுப்படுத்தவில்லை. ஆகவே இலங்கை முஸ்லிம் பெண்கள் தாம் விரும்பும் உடையை அணிவதற்கு அவர்களுக்கு பூரண உரிமை உண்டு என்ற பகிரங்க பிரகடனத்தை நாம் ஐ நாவிடமிருந்து எதிர் பார்க்கிறோம்.
அடுத்து முஸ்லிம் மக்களின் பல காணிகள் தினமும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. கடந்த யுத்த காலத்தில் வடக்கிலும், கிழக்கிலும் முஸ்லிம்களின் பல காணிகள் தமிழ் ராளிகளாலும் தமிழ் மக்களாலும் பறிக்கப்பட்டன. யுத்த முடிவை தொடர்ந்தும் தமது காணிகளுக்கு சொந்தம் கொண்டாட முடியாத நிலையில் முஸ்லிம்கள் உள்ளனர். யுத்தம் முடிவுற்ற பின் ங்களவர்களினால் ஒலுவில், பொத்துவில், புல்மோட்டை, முசலி என பல இடங்களில் முஸ்லிம்களின் காணிகள் பறிக்கப்படுவதாகவும் அதில் சிஙகளவர் அத்துமீறி குடியேறுவதாகவும், சில இடங்களில் வேண்டுமென்றே புத்தர் சிலைகளை வைப்பதன் மூலம் காணிகள் அபகரிக்கபடுவதாகவும் அறிகிறோம். இவற்றுக்கு ஆதாரமாக தேசிய பத்திரிகைகளில் வெளி வந்த செய்திகள் உள்ளன. ஆகவே முஸ்லிம்களின் காணிகள் அவர்களுக்கு மீண்டும் கிடைப்பதற்காகவும், இனியும் காணிகள் அபகரிக்கப்படாமல் இருக்கவும் முஸ்லிம்களின் காணி உரிமைகளுக்கான பிரகடனத்தை ஐ நா மூலம் எதிர் பார்க்கிறோம்.
மேலும், நாட்டில் மீன், கோழி போன்ற உயிருள்ளவற்றை உணவுக்காக கொலை செய்வதற்கும் வேறிடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாட்டுக்கு மட்டும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது வேண்டுமென்றே முஸ்லிம்களின் உரிமைகளில் கைவைப்பதாகவே நாம் காண்கிறோம்.
ஆகவே இந்த நாட்டில் சகல இன மக்களும் சரி சமமாக நடத்தப்படும் சூழல் ஏற்பட நீங்கள் ஐக்கிய நாடுகள் சபை மூலம் நடவடிக்கை எடுப்பீர்கள்; என உறுதியாக நம்புகிறோம். எமது மக்களின் உரிமைகள் சம்பந்தமாக விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் நாம் ஐ நா கூட்டத்தில் கலந்து கொள்ளவும்; தயாராக உள்ளோம். என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment