கொழும்பு: தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய வலையமைப்புகள் பிரதான மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுத்து இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளில் அவர்களை ஈடுபடவைக்கின்றன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
மனித உரிமைகள் பிரச்சினைகளை கிளப்பியே இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அவர்களை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவைக்கின்றனர் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். 2009 ஆம் ஆண்டில் யுத்தத்தில் தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்ட தமிழீழ புலிப்பயங்கரவாதிகளுக்கு சார்பான சர்வதேச வலையமைக்குள் அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை களவாக அனுப்பும் தொழிலில் முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
‘த ஒஸ்றேலியன்’ பத்திகைக்கு அளித்த விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் கொள்கை எமக்கு பிடித்திருக்கின்றது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு போய்விட்டால் அவுஸ்திரேலிய அரசாங்கம் உங்களை கவனித்துக்கொள்ளும் உதவிப்பணம் வழங்கும் இலவச மருத்துவ வசதிகள் கிடைக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் 2009 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டதால் சகலரும் நன்மை பெறும் வகையில் இலங்கையின் பொருளாதார சமூக அபிவிருத்தியில் முன்னேற்றம் கண்டுவருகின்றது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். புலிகள் தோற்கடிக்கப்பட்டமையால் அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளுக்கு பாதுகாப்பு நன்மைகளும் கிடைத்துள்ளன என்றும் அவர் கூறினார்.
Leave a comment