கொழும்பு: ஹஜ்ஜுக்காக நான்கு லட்சமே ஹாஜிகள் கட்டணமாக செலுத்த வேண்டும் என சிரேஷ்ட அமைச்சர் பௌசி கூறியிருப்பதை முஸ்லிம் மக்கள் கட்சி வரவேற்பதுடன் இக்கட்டன அறிவுப்பு என்பது நடைமுறையில் காண முடியாதுள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,
கடந்த வருடமும் 425,000.00 மட்டுமே ஹஜ் கட்டணம் என அறிவித்தும் பல முகவர்கள் 5 மற்றும் 6 லட்சங்கள் அறவிட்டதை கண்டோம். இது சம்பந்தமாக நாம் பத்திரிகைகளிலும் அறிவித்தோம். ஆக அமைச்சரின் இவ்வாறான அறிவித்தல் மூலம் இதுதான் ஹாஜிகளுக்கான கட்டணம் என பெரும்பாலான பொதுமக்கள் நினைத்து ஏமாற்றப்படுகிறார்களே தவிர, ஹஜ்ஜுக்கு செல்லும் சுமார் இரண்டாயிரத்தி ஐநூறு ஹாஜிகளுக்கு மட்டுமே இதன் உண்மை நிலை தெரிய வருகிறது.
ஆக அர்த்தமற்ற பிரயோக ரீதியில் இல்லாத இவ்வாறான ஒரு கட்டண நிர்ணயிப்பை மக்களுக்கு தெரிவிப்பது தேவையா என்ற கேள்வி எழுகிறது. இதைவிட விரும்பியோர் விரும்பிய கட்டணத்தை அறவிடலாம் என அறிவித்தால் மேல் மட்ட ஊழலை நிறுத்த முடியும்.
கடந்த ஹஜ் காலத்தில் 425,000.00 க்கு மேல் அறவிட்ட ஹஜ் முகவர்களுக்கு எதிராக சில ஹாஜிகள் பொதுபல சேனா ஊடாக வழக்கு தாக்கல் செய்ததன் காரணமாக மேலதிகமாக அறிவிடப்பட்ட பணத்தை மீள் பெற்றுள்ளார்கள். இதற்கான சாட்சியங்கள் எமது கட்சிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த முகவர் இவ்வாறு மேலதிக கட்டணத்துக்காக சில அதிகாரிகளுக்கு பணம் கொடுத்ததாகவும் கூறியதாக ஹாஜி ஒருவர் எமது கட்சியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இதன் மூலம் கடந்த வருடம் அமைச்சரினால் பிரகடனப்படுத்தப்பட்ட தொகையை விட அதிகம் பெறப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது. ஆனாலும் இவர்களுக்கெதிராக ஹஜ்குழுவுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பௌசி அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது எமக்கு தெரிய வரவில்லை.
ஆக ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜுக்காக ஒரு தொகை நிர்ணயம் செய்வதும் முகவர்கள் விரும்பிய கட்டணத்தை அறவிடுவதும் மக்களை ஏமாற்றுகின்ற ஒரு நடவடிக்கையாகவே தெரிகிறது. இவ்வாறு கட்டணத்தை அறிவிப்பதால் ஹாஜிகளுக்கு எந்த நன்மையும் கிடைப்பதாக தெரியவில்லை.
மாறாக ஊழல்வாதிகளுக்கு நிச்சயம் இதில் நன்மை உண்டு. இதனை பயன்படுத்தி ஹஜ் முகவர்களிடம் தமக்கான கமிசன் பெறப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. அத்துடன் இவ்வாறன நடவடிக்கைகள் மூலம் அப்பாவி கிழக்கு மாகாண ஹாஜிகளே அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள். ஹஜ் கோட்டாவை முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாகாணங்களுக்கு விகிதாசார முறைப்படி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை கடந்த பல வருடங்களாக எமது கட்சி சொல்லி வருகிறது. ஆனாலும் அது நிறைவேறவில்லை என்பதற்கு சமூக அக்கறையற்ற கிழக்கு மாகாண அதிகார அரசியல்வாதிகளும் பிரதான காரணமாகும்.

Leave a comment