முஸ்லிம்களுக்கு எதிரான மத காலாசார உரிமை மீறல்கள் தொடர்பில் நவநீதம்பிள்ளையிடம் PMGG அறிக்கை சமர்ப்பிப்பு

– PMGG ஊடகப் பிரிவு:

PMGG-Logo[1]இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் மத உரிமை மீறல்கள், இனவாத அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றினை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நேரில் கையளித்தது.

நவநீதம்பிள்ளை இன்று புதன் கிழமை (28.08.2013) திருகோணமலையில் வைத்து சிவில் சமூக பிரதிநிதிகளைச் சந்தித்த போதே PMGG பிரதிநிதிகளால் இவ் அறிக்கை அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்திற்குப் பிந்திய கடந்த மூன்று வருடங்களாக முஸ்லிம்களின் மத உரிமைகளை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள், தீவிரமடைந்துவரும் வெறுப்புணர்வுப் பிரசாரங்கள் என்பன அவ் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் முஸ்லிம்களின் கலாச்சார உரிமைகளுக்கு எதிரான இனவாத அச்சுறுத்தல் நடவைக்கைகள் தொடர்பிலும் அத்தோடு முஸ்லிம்களின் வியாபார நலன்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பிலும் இவ்வறிக்கையில் விரிவானதும் ஆதாரபூர்வமானதுமான விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் முஸ்லிம்களுக்கு எதிரான மத உரிமை மீறல் சம்பவங்களின்போது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டாது பொலிசார் பராமுகமாக நடந்து கொண்டமை தொடர்பிலும் இதுவிடயத்தில் அரசாங்கம் தனது கடமையைச் செய்யத் தவறியமை தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதிலாக முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளை ஊக்குவிக்கும் வகையிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்தன எனவும் இவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by

Leave a comment