எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அலரி மாளிகையை விட, 4 ஆவது மாடியை பார்த்ததுதான் அதிகம்

selvamவவுனியா: வெற்றிலைச் சின்னத்தில் வாக்கு கேட்டு வருபவர்கள் எமது மக்களிடம் அரிசியையும் பருப்பையும் கொடுத்துவிட்டு கேட்கின்றார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள் என அவர்களுக்கு நாம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

எமது மக்களுக்காக குரல் கொடுத்தமையினால் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அலரி மாளிகையை விட அதிகமாக 4 ஆவது மாடியை பார்த்ததுதான் அதிகம். எனவே இவர்களுக்கு என்ன அருகதை உள்ளது கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு? என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவத்ததாவது…

அந்த அரசாங்கமும் அவர்களுடன் இணைந்து செயற்படுபவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உணர்ச்சி வசமாக பேசும் அபிவிருத்தியை செய்யாது என கூறுவதை கேட்டிருக்கின்றோம். ஆனால் அபிவிருத்தி என்பதை விட எமது மக்கள் அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதே உண்மை.

கிராமப்புறங்களில் எமது மக்களின் முகங்களை பார்க்கின்றபோது வறுமையோடு இருந்து கொண்டிருக்கின்ற காய்ந்து போன முகங்களை செழிப்டையச் செய்கின்ற வகையிலேயே வேலைத்திட்டங்களை தமிழர்கள் ஆளும் வட மாகாணசபை செய்யும். ஆகவே நாம் அச்சப்படத் தேவையில்லை.

நாங்கள் இந்தியா சென்றபோது இந்தியப் பிரதமர் சொன்னார் மாகாணசபையை கைப்பற்றுங்கள் அனைத்து விடயத்தையும் நாங்கள் பார்க்கின்றோம் என்ற உத்தரவாத்தை சொன்னார். அத்தோடு இவ்வாறு அமெரிக்க சொன்னது ஏனைய நாடுகளும் சொன்னது.

ஆகவே எமது மக்களின் அடிப்படைத் தேவைகைளை பூர்த்தி செய்து தூக்கிவிடுகின்ற செயற்பாட்டை தமிழர்கள் ஆளப்போகும் இந்த வட மாகாண அரசானது நிச்சயமாக செய்யும். இன்று ஜனாதிபதி கூட சொல்லிவிட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட மகாணசபையை கைப்பற்றும் என. ஆனால் அவர் ஏன் அவ்வாறு சொல்கின்றார்.

வடக்கில் ஜனநாயம் இருக்கின்றதா என்பதை காட்டவா வெற்றிலைச் சின்றத்தில் தமிழர்களை நிறுத்தியுள்ளார். பல சுயேற்சை குழுக்களை களமிறக்கியுள்ளார்.

அவ்வாறு இறக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வீதத்தை குறைப்பதற்கான செயற்பாட்டை செய்கின்றார். இந்த வீதாசார முறையில் வெற்றிலையில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெறும்போது வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் வெற்றிபெறவில்லை எனது கட்சியை சேர்ந்தவர்களும் வெற்றி பெற்றுள்ளார்கள் என கூறி தனக்கும் பங்கு கேட்கும் நிலையை உருவாக்க முனைகின்றார்.

என்னுடய இனத்தை அழித்து எனது நிலத்தை பறித்து சிங்கள குடியேற்றங்களையும் இராணுவ குடும்பங்கைளயும் குடியேற்ற வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்ற அரசுக்கு எங்களுடைய வாக்குகளை கேட்பதற்கு என்ன யோக்கிதை உள்ளது. எனவே வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தமிழர்களுக்கு மானமுள்ள தமிழர்கள் வாக்களிக்ககூடாது.

இன்று எங்களது தேசத்தில் என்ன நடக்கின்றது. தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்களை சிதைக்கின்ற வகையிலே சிங்கள குடியேற்றங்களை கொண்டு வந்து தமிழர்களுக்கு பூர்வீக வரலாறு இல்லை என்று செல்லும் நிலையையும் எங்களது கடலிலே எங்களுடைய தமிழன் தொழில் செய்யமுடியாத நிலையையும் உருவாக்கியுள்ளனர்.

வடக்கிலே இன்றும் இராணுவத்தை வைத்திருக்கின்றார்களே ஏன் வைத்திருக்கின்றார்கள். விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக கூறிக்கொண்டு ஏன் இன்னும் இராணுவம் இங்கு குடிகொண்டுள்ளது. சில வேளைகளில் இந்தியாவை தாக்குவதற்காக இராணுவத்தை நிலை நாட்டியுள்ளனர்?

நாம் எத்தனை போராட்டம் நடத்தினோம். எவ்வளவு மக்கள் எங்களுடன் அணி திரண்டார்கள். இராணுவ அடக்குமுறையினால்தானே தமது உணர்வுகளையும் மன வேதனையையும் வெளிக்காட்டமுடியாமல் எமது மக்கள் எங்களோடு வந்திருந்தார்கள். ஆகவே இராணுவத்தை வைத்துக்கொண்டு எம்மை அடக்க நினைக்கும் அரசு எம்மிடம் வாக்கு கேட்க வருகின்றது. அதற்கு நாம் வாக்களிக்க வேண்டுமா என்பதனை உணரவேண்டும் என தெரிவித்தார். jpc

Published by

Leave a comment