மனிலா: பிலிப்பைன்ஸில் 2 கப்பல்கள் மோதிக் கொண்டதில் பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸில் உள்ள சிபு துறைமுகத்தில் எம்.வி. புனித தோமஸ் அக்வினாஸ் என்ற சொகுசு கப்பல் சல்பிசியோ எக்ஸ்பிரஸ் சீடே என்ற சரக்கு கப்பல் மீது கடந்த வெள்ளிக்கிழமை மோதியது.
இதில் பயணிகள் கப்பலில் துளை ஏற்பட்டு கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 49 பேரின் கதி என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.
இதுவரை பயணிகள், சிப்பந்திகள் என்று மொத்தம் 750 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. நேற்று காலை 5.30 மணிக்கு மீட்புக் குழுவினர் கடலில் இறங்கியுள்ளனர்.
ஆனால் மோசமான வானிலை காரணமாக 10 மணிக்கு மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன என்று கப்பற்படை செய்தித் தொடர்பாளர் கிரகரி ஜெரால்ட் பேபிக் தெரிவித்தார்.

Leave a comment