காத்தான்குடி: கிழக்கின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்களில் ஒன்றாகிய MySoft-2U நிறுவனமானது புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு, மக்களுக்குக் கம்ப்யூட்டர் அறிவின் அவசியத்தை வலியுறுத்துமுகமாக கடந்த 12ம், 13ம் திகதிகளில் இரண்டுநாள் இலவசக் கண்காட்சி ஒன்றை அதனது கல்லூரிக் கட்டடத்தில் ஒழுங்கு செய்திருந்தது.
முதலாம் நாள் ஆண்களுக்கான நிகழ்வை, பிரபல சிறுவர் இலக்கிய எழுத்தாளரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உதவிப் பணிப்பாளருமாகிய டாக்டர். ஓ.கே. குணநாதன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
அதேபோன்று இரண்டாம் நாள் மகளிருக்கான நிகழ்வை, பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
‘இன்றய யுகத்தின் இன்றியமையாத தேவையாக மாறியுள்ள கம்ப்யூட்டரானது ஒரு மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறெல்லாம் பங்களிப்புச் செய்கின்றது’ என்ற தொனிப் பொருளில் மேற்படி கண்காட்சி அமைந்திருந்தது.
இதில், அலுவலகமொன்றில் கம்ப்யூட்டரின் பயன்பாடு, அச்சகமொன்றில் கம்ப்யூட்டரின் தொழிற்பாடு, இணைய வடிவமைப்புத் துறை பற்றிய அறிமுகம், கட்டட மற்றும் மொடலிங் துறையில் முப்பரிமாண (3D) இரு பரிமாண (2D) வரைபுகள், வியாபார ஸ்தலங்களில் கணக்கேடுகளைப் பேணுவதற்கான மென்பொருட்கள், பாடசாலை பொது நிறுவனங்களுக்குத் தேவையான சொந்த மென்பொருள் தயாரிப்பதற்கான ஆலோசனைகள் போன்ற பல்வேறு சுவாரஸியமான விடயங்களுடன் சிறுவர்களை குதூகலப்படுத்தக் கூடிய புதிய தொழில்நுட்பமாகிய சென்ஸார் விளையாட்டுக்களும் ஒழுங்கு செய்யப் பட்டிருந்தன.
MySoft-2U யினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களைக் கொண்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக்கண்காட்சிக்கு, பெருமளவிலான மக்கள் கலந்துகொண்கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வினை அதனது பிரதம நிறைவேற்று அதிகாரி கே.எம். மஸாஹிம் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.சி.ஜிஹாக் அஹமட் ஆகியோர் வழிநடாத்தியது குறிப்பிடத்தக்கது.
![2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/08/21.jpg?w=150&h=84)
Leave a comment