மாவத்தகம: கண்டி – குருநாகல் பிரதான வீதியின் மாவத்தகம பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள இரு பள்ளிவாசல்களுக்கு முன்னால் ‘அமைதியாகச் செல்லவும்’ என்று போடப்பட்டுள்ள விளம்பரப் பலகையை பொலிஸார் அகற்ற முற்பட்டதையடுத்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
பொது பல சேனாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டமொன்று குருநாகல் நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் கண்டி – குருநாகல் வீதியில் பறகஹதெனிய பள்ளிவாசலுக்கு முன்னால் ‘அமைதியாகச் செல்லுங்கள்’ என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள விளம்பரப் பதாதையை அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் அதனை அகற்றாவிட்டால் தாங்கள் அகற்ற வேண்டி வரும்’ என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து அப்பகுதிக்கு இன்று விரைந்த மாவத்தகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவினர், பதாதையை அகற்ற முற்பட்ட போது ஊர் மக்கள் ஒன்று திரண்டு அதனைத் தடுத்து நிறுத்தினர்.
பறஹகதெனிய பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல், ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசல் ஆகிய இரு பள்ளிவாசல்களுக்கு முன்னாலே இந்த இரு விளம்பர பலகைககள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்விரு பள்ளிவாசல்கள் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தின் சட்ட ரீதியான ஆணையுடன் வந்தால் இதனைக் அகற்றுவதற்கு நாங்கள் அனுமதிப்போம் என்று கூறி இதனை அகற்றவிடாது பொது மக்கள் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டனர்.
இந்த பலகையை இரு பள்ளிவாசல்களுக்கு முன்னால் நிர்வாக சபையினர் போடவில்லை. வீதி போக்குவரத்துப் பிரிவினால் போடப்பட்ட ஒன்று.
இவ்விளம்பரப் பலகையை போடுவதற்காக நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அதிகார சபை 22,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஊர் மக்கள் பொலிஸாரிடம் தெளிவுபடுத்தினர்.
-Tw


Leave a comment