காத்தான்குடி: எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் அவர்களின் முயற்சியில் ஆற்றங்கரையோரத்தில் இடம்பெறும் சிறுவர் பெருநாள் பஸார் கொண்டாட்டங்களுக்காக கிண்ணியாவிலிருந்து பாதை ஒன்று விசேடமாக தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் அவர்களின் முயற்சியில் காத்தான்குடி ஆற்றங்கரைக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றது.
சுமார் 15,000 கிலோ அதிகமான எடையைக் கொண்ட இப்பாதை, காத்தான்குடி-5, ஆற்றங்கரையில் சுமார் 100 மீட்டர்களுக்கு அப்பால் நிறுத்திவைக்கப்படும்.
நிறுத்திவைக்கப்படும் இப்பாதை ஓர் சிறிய மிதக்கும் உணவகமாக அமைவதுடன், வகைகையான விசேட உணவுகளும் உடனுக்குடன் இங்கு பரிமாறப்படும்.
இப்பாதைக்குச் சென்றுவருவதற்கு உயிர்காப்பு (Life Guards) அதிகாரிகளுடன் இரு படகுகளும் (Boat) சேவையில் ஈடுபடுத்தப்படும். இப்படகுகளில் பயணிப்பது முற்றிலும் இலவசமாக அமையும்.
காத்த நகர் வரலாற்றில் இப்படியான ஓர் நிகழ்வு ஒன்று இடம்பெற இருப்பது இதுவே முதற்தடவையாகும்
பெருநாளை முன்னிட்டு மிதக்கும் உணவகம் அமைப்பதற்கான விரைவான ஏற்பாடுகள் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் முழு நேரமாக இடம்பெற்று வருகின்றன. மிதக்கும் உணவகம் ஏற்பாடுகள் தாமதிக்கும் பட்சத்தில் சிலவேளை பெருநாள் அடுத்த தினங்களில் மிதக்கும் உணவகம் வைபவரீதியாக திறந்துவைக்கப்படும்.
இம்முறை சிறுவர்களுக்கான பெருநாள் பஸார் காத்தான்குடி-5 ஆற்றங்கரை ஓரத்தில் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment