கல்முனை: கல்முனை வலயத்திலுள்ள சில பரீட்சை நிலையங்களில் பணியாற்றும் உதவி மேற்பார்வையாளர், நிலைய ஊழியர் போன்றோரிடம் கையடக்கத் தொலைபேசிகள் இருந்ததாக பிரதேச இணைப்பாளர் எம். கே. எம். மன்சூர் பரீட்சை ஆணையாளர் நாயகத்திற்கு அவசர ‘ பெக்ஸ்’ மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
க. பொ. த. (உ/த) பரீட்சை நேற்று (திங்கள்) ஆரம்பமாகியது. கல்முனை வலயத்திற்கு பிரதேச மேற்பார்வையாளராக நியமிக்கப் பட்டுள்ள சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் மன்சூர் நேற்று சில பரீட்சை நிலையங்களுக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.
அங்கு இக்காட்சியைக் கண்டு அவர்களிடமிருந்து கைத்தொலைபேசிகளை அப்புறப்படுத்தினார்.
பரீட்சை விதியின்படி மேற்பார்வையாளர் மட்டும் கையடக்கத் தொலைபேசிகள் வைத்திருக்கலாம் என்பது தெரிந்ததே.கையடக்கத் தொலைபேசிகள் வைத்திருந்த பரீட்சைக் கடமையிலீடுபட்டோரது விபரங்களையும் அவர் பரீட்சை ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
பரீட்சை ஆணையாளர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என்பதை மாணவரும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர். இதேவேளை சாய்ந்தமருது எல்லையில் பரீட்சை நிலையமருகேயுள்ள பள்ளிவாசலில் ஒலிபெருக்கி உரத்து ஒலித்ததால் பரீட்சார்த்திகள் மேற்பார்வையாளரிடம் முறையிட்டனராம்.
– தினகரன்
Leave a comment