மின்சாரமில்லாத வன்னி மாவட்ட பிரதேசங்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை

rishad– இர்ஷாத் றஹ்மத்துல்லா

வன்னி:  வன்னிமாவட்டத்தில் மின்சாரம் இல்லாத பிரதேசங்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுவருவதாக மின்சக்தி அமைச்சர் பவித்திரா தேவி வன்னியாராச்சி வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனிடம் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சர் பவித்திரா தேவி வன்னியாராச்சியினை அவரது அமைச்சில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தியின் போது மேற்கண்டவாறு கூறினார்.

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் தற்போது மீள்குடியேற்றப் பணிகள் நடை பெற்றுவருவதாகவும், இம்மக்களின் அடிப்படை தேவையான மின்சாரத்தை பெற்றுக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சர் பவித்திரா தேவி வன்னியாராச்சியிடம் கேட்டுக் கொண்டார்.

இம்மக்களின் மீள்குடியேற்றம், மற்றும் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் என்பனவற்றினை நடை முறைக்கு கொண்டுவர இந்த மின்சாரத்தின் அவசியத்தையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வலியுறுத்தினார்.

அதே வேளை 200 மில்லியன் ரூபாய்களை மின்சக்தி அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு உடன் மின்சாரம் வழங்க தேவையான பணிப்புரைகளை பிராந்திய மின் சக்தி அதிகாரிகளுக்கு அமைச்சர் பவித்திரா தேவி வன்னியாராச்சி உடனடியாக தொலைபேசி மூலம் வழங்கினார். மின்சாரம் வழங்கப்பட்டுள்ள கிராமங்களில் வீடுகளுக்கான மின்சார இணைப்பு வழங்கப்படுவதில் காணப்படும் தாமதம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.  இந்த சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கும் கலந்து கொண்டார்.

 

Published by

Leave a comment