கொழும்பு: கொழும்பு தெற்கு துறைமுகத்தை பார்வையிடுவதற்கு எதிர்வரும் 8 முதல் 13 ஆம் திகதிவரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். 400 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு தெற்கு துறைமுகத்தின் முதற்கட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 5 ஆம் திகதி திறந்து வைக்கிறார்.
கடலின் நடுவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு தெற்கு துறைமுகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் நேரில் காண அவகாசம் வழங்குமாறு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதோடு 2016 ல் துறைமுக விஸ்தரிப்பு பணிகள் பூர்த்தி செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a comment