மட்டக்களப்பு: இலங்கை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் கிழக்கு மாகாணம் என்பது சமூக நல்லிணக்கத்தில் ஏனைய மாகாணங்களுக்கு முன்னோடியான மாகாணமாக திகழ வேண்டுமென கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.
மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்-சிங்கள,முஸ்லிம்,கிறிஸ்தவ ஆகிய மதத்தவர்கள் 400 பேருக்கு மேல் கலந்து கொண்ட சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 30.07.2013 செய்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு சின்ன உப்போடை ஈஸ்ட் லகூன் நட்சத்திர ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணம் என்பது பல்லிண சமூகங்கள்,மதங்கள் வாழக் கூடிய ஒரு மாகாணமாகும்.ஒரே தேசியம் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இலக்கை நோக்கிப் பயணிக்கும் இந்த நிலையில் கிழக்கு மாகாணம் இன நல்லுறவில் பாரிய பங்களிப்புச் செய்ய வேண்டும்.
இவ்வாறான சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தக் கூடிய ஒரு நிகழ்வாகவே இந்த இப்தார் நிகழ்வை நான் கருதுகிறேன்.
முஸ்லிம்கள் புனித ரமளான் காலத்தில் நோற்கும் நோன்பு ஒரு தர்ம நிகழ்வாகும்.
நான் முஸ்லிம்களின் இப்தார் தொடர்பாக இன்றுதான் தெரிந்து கொண்டேன்.
இது சமூக நல்லிணக்கம்,பிறருடைய பசி,தாகம்,ஏழ்மை,வறுமை நிலை என்பவற்றை உணர்த்திக் காட்டுதல்,அடுத்தவர்களை மதித்தல்,நாவை கட்டுப்படுத்தல்,இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உணர்;த்தி நிற்கின்றது.
இவ்வாறான நிலையில் நாமனைவரும் இன நல்லுறவைப் பேணி சமூக நல்லிணக்கத்துடன் வாழ்வது மட்டுமல்லாமல் எமது சந்ததியினரும் இன நல்லுறவைப் பேணி வாழ்வதற்கான வளம்மிக்க எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.
என்னுடைய சேவைக் காலத்தில் கிழக்கு மாகாணம் என்பது இன நல்லிணக்கம் ஏற்படுவதற்கான சிறந்த சூழலாகும்.அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் மிகச் சிறந்த ஒரு சூழலாகும்.
எனவே எவ்வித வேறுபாடுமின்றி ஒற்றுமையுடன் வாழ நாம் எல்லோரும் முயற்சிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Leave a comment