தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்ற உயர் மட்ட சந்திப்பு

PMGG & TNA Discustion 27.07.2013 (5)PMGG ஊடகப்பிரிவு

யாழ்ப்பாணம்: எமது தேசத்தில் இனங்களுக்கிடையிலான நல்லுறவின் முக்கியத்துவம் வெகுவாக உணரப்படுகின்ற ஒரு சூழலில், யுத்தத்திற்கு பின்னரான வட இலங்கையில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இனநல்லுறவு, சகவாழ்வு இணக்கப்பாட்டு அரசியல் என்பன குறித்து ஆழமாக சிந்திக்கவும் செயற்படவும் வேண்டிய தேவை மனிதம் குறித்து சிந்திக்கின்ற எல்லோராலும் வலியுறுத்தப்படுகின்றது.

இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் தேசத்தில் அரசியல் என்பது தனிநபர் இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட வியாபார  அரசியலாக மாறிவிட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு மாற்றீடாக சமூக இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட விழுமிய அரசியல் ஒழுங்கொன்றின் தேவை  தற்போது  மிகவும்   பலமாக உணரப்படுகிறது.

PMGG & TNA Discustion 27.07.2013 (3)

எனவே இவ்விரண்டு முக்கிய அடிப்படைகளையும் கருத்தில் கொண்டு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல்  கூட்டமைப்பிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் உயர் மட்ட சந்திப்பொன்று கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அதன் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ஸ்ரீதரன், முதலைமைச்சர் வேட்பாளர் முன்னை நாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றதுடன் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு சார்பில் அப்துர் றஹ்மான் (பொறியியளாலர்), நஜா முஹம்மத், அப்துல் வாஜித், அஷ்ஷெய்க் பிர்தௌஸ் (நளீமி), அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப்,  முஹம்மட் பிர்தௌஸ், முஹம்மட் லாபிர் மற்றும் முஸ்தபா மௌலவி ஆகியோர் பங்கேற்றனர். 

PMGG & TNA Discustion 27.07.2013 (1)

இச்சந்திப்பின் போது வடக்கு முஸ்லிம்களின்  மீள் குடியேற்றம், புனர்வாழ்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் அவர்களது ஏனைய நலன்கள் குறித்தும்,  அத்தோடு அமையப்போகும் வட மாகாண சபையில் அவர்களது பிரதிநிதித்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அத்தோடு இணக்கப்பாட்டுடன் கூடிய அரசியலுக்கான அடிப்படைகள் குறித்தும், விழுமிய அரசியலுக்கான மாதிரிகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், வட மாகாண சபை நிர்வாகத்தில் முஸ்லிம்களின் பங்கேற்பு குறித்தும் பேசப்பட்டது. இரு சாராருக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்வாங்கப்படவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்பட்டதுடன் அதற்கான நகல்களும் இச்சந்திப்பைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 

PMGG & TNA Discustion 27.07.2013 (5)

இச்சந்திப்புக்களின் போது காணப்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில் வெகுவிரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதோடு, தேர்தல் பிரச்சாரங்களில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு நேரடியாக பங்கேற்கும்  என அதன் ஊடகப் பேச்சாளர் நஜா முஹம்மத் தெரிவித்தார்.

Published by

One response to “தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்ற உயர் மட்ட சந்திப்பு”

  1. இன்ஷா அல்லாஹ் நீங்கள் செய்யப்போகும் புரிந்துணர்வு ஒப்பந்தம் முழு நாட்டிற்குமே முன்மாதிரியானதாகவும், அரசியல் வியாபாரிகளுக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமையவேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.

    இரு சமூகங்களின் வெற்றிக்காகவும் பிரார்த்திக்கின்றேன்.

Leave a comment