கெவிலியாமடு கிராமத்தில் அத்துமீறி குடியேறியுள்ள அம்பாறை மாவட்டத்தவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு த.தே.கூ. மட்டு-நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கோரிக்கை

selvarasa– பழுலுல்லாஹ் பர்ஹான்

 மட்டக்களப்பு:  பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கெவிலியாமடு கிராமத்தில் அத்துமீறி குடியேறியுள்ள அம்பாறை மாவட்டத்தவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு த.தே.கூ. மட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

 மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தின்  எல்லையான  கண்டி – மகா ஒயா வீதியிலுள்ள கெவிலியாமடு கிராமத்திற்கு நேரில் விஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்துள்ளார்.

 இதன் பின்னர் மாவட்ட செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவிக்கையில்,

 ‘மட்டக்களப்பு – அம்பாரை மாவட்டங்களின் எல்லையான மஹாஒயா – கண்டி  வீதியிலுள்ள  கெவிலியாமடு கிராமத்தில்  ஏற்கனவே 227 சிங்கள குடும்பங்களும்  புழுகனாவ கிராமத்தில் 50 சிங்கள குடும்பங்களும் வாக்காளர் இடாப்பில் பதிவு  செய்து நிரந்தரமாக வசித்து வருகின்றன.

 ஆனால் தற்போது கெவிலியாமடு கிராமத்தில் வாக்காளர் இடாப்பிலோ அல்லது வதிவிட பதிவு இன்றியோ அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த நூற்றிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தர மற்றும் தற்காலிக இருப்பிடங்களை அமைத்துள்ளன.

 மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்  இது தொடர்பாக ஆராய்யப்பட்டு, அத்துமீறி குடியேறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை பிரதேச செயலாளரால் எடுக்கப்பட்டிருந்தது.

 சட்ட நடவடி;கைக்குள்ளான குடும்பங்களை வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு  நீதிமன்றத்தினால் உத்தவிடப்பட்டிருந்த போதிலும் எந்தவொரு குடும்பமும் வெளியேற்றப்படவில்லை என்பதை அங்கு நேரில் சென்றிருந்த போது காண முடிந்தது.

 வெளியேற்றுமாறு  நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூட அதனை மீறும் வகையில் பௌத்த பிக்கு ஓருவரால் சில குடும்பங்களுக்கு நிரந்த வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

 இந்தக் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுவது தொடர்பாக அதிகாரிகள் ஏதோ ஒரு காரணத்தினால் அக்கறை இன்றி காணப்படுவதாகவே தெரிகின்றது.

 இந்த நிலையில் இது தொடர்பாக மாவட்ட செயலாளரை சந்தித்து அத்தமீறிய குடியேற்றங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கேட்டுள்ளதோடு எழுத்து மூலமும் இந்த விடயத்தை அவரது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.

அது மட்டுமன்றி போருக்கு பின்னர் அந்த பகுதியில் மீள்குடியேறி வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ள தமிழ் குடும்பங்களின் அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பாகவும் கவனம் செலுத்துமாறும் மாவட்ட செயலாளரிடம் வேண்டுகோள்விடுத்துள்ளேன்’ என்றார்.

Published by

Leave a comment