மன உறுதிக்கு பெயர் பெற்ற மலாலா!

130104101106_malala_hospita_discharge_304x171_bbc_nocredit[1]– அஹமட் ஆஸிர்

மலாலா யூசுப்ஜாய், 16 வயது பாகிஸ்தான் மாணவி. மன உறுதியின் மறுபக்கம். பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியில்,  பஷ்டூன் பழங்குடியின மக்கள் நிறைந்த பகுதியில்,  குஷால் பப்ளிக் பள்ளி என்ற பெயரில், கல்வி நிறுவனங்களை நடத்தி வரும், ஜியாயுதீன் யூசுப்ஜாய் மகள் இவர்.

அப்பகுதியில் அதிகாரம் செலுத்தி வரும் தலிபான்களுக்கு எதிராக, 11 வயது முதல், குரல் கொடுத்து வரும் மலாலா, பி.பி.சி. ‘டிவி’யின்  உருது மொழி பிரிவில் பல கட்டுரைகள் எழுதியவர். மலாலாவுடன் பிறந்தவர்கள், இரண்டு சகோதரர்கள். இவர்களின் தந்தை ஜியாயுதீன் யூசுப்ஜாய்,  தன் மகன்களைப் போலவே,  மகள் மலாலாவையும் தைரியமாக வளர்த்தார்.

இரவில் நெடுநேரத்திற்குப் பிறகும் வெளியே நடமாட விடுவது, பள்ளிக்குத் தைரியமாக அனுப்புவது,  பொதுக் கூட்டங்களில் பேசச் செய்வது என,  தலிபான்களுக்குப் பிடித்தம் இல்லாத பல செயல்களில் மலாலாவை ஈடுபடுத்தினார். மலாலாவுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்ற விருப்பம். ஆனால் அவரின் தந்தைக்கு மலாலாவை அரசியல்வாதியாக மாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது.

பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியில், பெண்கள் படிக்கக் கூடாது.  பொது இடங்களுக்குத் தனியாகச் செல்லக் கூடாது. பிற ஆண்களுடன் பேசக் கூடாது என, கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள தலிபான்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததால், 13 வயதில், தலிபான்களால் சுடப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில், லண்டன் கொண்டு செல்லப்பட்டு,  சிகிச்சை பெற்று பூரண உடல் நலம் பெற்றார் மலாலா.

சமீபத்தில்  இவரின் 16வது பிறந்த நாளின் போது,  ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது,  இவரின் பிறந்த நாளை,  ‘மலாலா நாள்’ என  ஐக்கிய நாடுகள் சபை கவுரவித்து உள்ளது. ”துப்பாக்கி மூலம்,  என்னைக் கட்டுப்படுத்த முடியாது. துப்பாக்கிக் குண்டுகளை விட,  கல்விக்குச் சக்தி அதிகம்’ என்று வீராவேசமாக பேசினார்.’

‘மலாலா நாள்,  என்னுடைய நாள் மட்டுமல்ல.  இந்த உலகின் ஒவ்வொரு பெண்ணின் நாள்.  உரிமைக்காகப் போராடும், ஆண்,  பெண் அனைவரின் நாள்’ என மலாலா ஆற்றிய உரை உலகம் முழுவதும் ஒலித்தது.

Published by

Leave a comment