மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் கிராமிய நீர்வழங்கல் திட்டங்களுக்கான அலுவலகங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் பாவனைக்கான நீர்வியோகமும் வழங்கப்பட்டுள்ளன.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராமத்தில் 39 மில்லியன் ரூபா செலவிலும் மதுரங்கேணி கிராமத்தில் 29 மில்லியன் ரூபா செலவிலும் ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு நிறுவனத்தின் நிதியுதவியுடன் இந்த நீர்வழங்கல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கு அமைய கிழக்கு மாகாண நீர்வழங்கல் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இந்த கிராமிய நீர்வழங்கல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி என்.சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கலந்துகொண்டார். கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார். அதிதிகளாக முதலமைச்சரின் செயலாளரும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருமான யூ.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார், வாகரை பிரதேச செயலாளர் செல்வி ஆர்.ராகுலநாயகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)





Leave a comment