காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் விதவைகள், அனாதைகள், மற்றும் வறிய மக்களுக்கான றமழான் உலர் உணவு விநியோகம் திட்டத்தின் கீழ் காத்தான்குடியிலுள்ள 375 வறிய மக்களுக்கான றமழான் உலர் உணவு விநியோக நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரும் சமூக சேவையாளருமான இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் காத்தான்குடி அன்வர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
முதலாவது பொதியை நிறுவனத்தினது முதல்வர் இல்மி அஹமட் லெவ்வை பார்வை இழந்த ஒருவருக்கு வழங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நீதி அமைச்சர் றவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர் மற்றும் அதிதிகள் வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.
இந்நிகழ்வில் நீதி அமைச்சர் றவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் றஹ்மத் மன்சூர், ஏறாவூர் பிரதேச செயலாளர ஹனீபா, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு பிராந்திய பொறுப்பாளர் ஜூனைட் நளீமி, ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அமீன் பலாஹி, கிழக்கு மண் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் ரீ. எல். ஜவ்பர்கான், தென்கிழக்கு பல்கலைக்கழுகத்தின் விரிவுரையாளர் மன்சூர், பொறியியலாளர் றிஸாத், கா-குடி ஜம்இய்யதுல் உலமாவின் செயலாளர் ஜிப்ரி மதனி, சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் செயலாளர் றிஸ்வான் மதனி, பொருளாளர் தாஹிர் ஜே.பி, இணைச் செயலாளர் மௌலவி மஸூத் ஹாஸிமி மற்றும் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் புத்திஜீவிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
றமழான் உலர் உணவு விநியோகம் நிகழ்வை தொடர்ந்து விஷேட இப்தார் நிகழ்வு இங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment