பழுளுல்லாஹ் பர்ஹான்

மஹியங்கனை மஸ்ஜிதுல் அறபா ஜூம்ஆப் பள்ளிவாசல் மூடப்பட்டிருப்பது இலங்கையின் இன நல்லுறவிற்கு பாரிய சவாலாக அமைவதாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
ஒரு சில இனவாதிகளினால் தொடச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் அடக்கு முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளில் ஒன்றாக சென்ற 11ம் திகதி மஸ்ஜிதுல் அறபா ஜூம்ஆப் பள்ளிவாசல் இனம் தெரியாத காடையர்களினால் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டது.
இன்று 19ம் திகதி இப்பள்ளவாசலில் ஜூம்ஆத் தொழுகைக்காக தயாராகிக் கொண்டிருந்த போது பிரதேசத்தின் ஊவா மாகாண காணி அமைச்சர் ஜூம்ஆ தொழுகை நடாத்த வேண்டாம் எனவும் தொழுகை நடாத்தப்படின் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு முஸ்லிம்களும் அவர்களின் வியாபார நிலையங்களும் முஸ்லிம் வணக்கஸ் தலங்களும் தாக்கப்படுவது அடிப்படை உருமை மீறலாக காணப்படுகிறது.
இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச குடியரசு நாடு என்றவகையில் ஒரு இலங்கை பிரஜை தான் விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கும் தான் சார்ந்த மத அனுஸ்டானங்களை மேற் கொள்வதற்கும் உருமை உடையவனாக காணப்படுகின்றான். இது இவ்வாறு இருக்கும் போது ஒரு தனிப்பட்ட குழு இவ்வாறான இன அடக்கு முறைகளையும் இன பயங்கரவாதத்தையும் தோற்றுவிப்பதை ஒரு போதும் சகித்துக் கொண்டு பார்வையாளர்களாக இருந்துவிட முடியாது. இவ்வாறானவர்களின் செயற்பாடு புரையோடிப்போய் பூகம்பமாய் வெடிப்பதற்கு முன்னர் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தலையிட்டு இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் ஒருபோதும் பிற மதத்தவர்களை தூசித்தது கிடையாது. அவர்கள் அவர்களின் பாட்டில் மார்க்க கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர். புரையோடிப்போய் இருந்த யுத்த நிறைவின் பின்னர் சகல மதத்தவர்களும் இலங்கையர்கள் என்ற வாஞ்சையோடு ஒற்றுமையாக ஒற்று உறவாடிக் கொண்டிருக்கும்போது அவற்றிற்கு குந்தகம் விளைவித்து நாட்டில் நிலவும் சமாதான சூழலை இல்லாதொளிக்கும் செயலாகவே இவ்வின வெறியர்களின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அரசாங்கமோ அதிமேதகு ஜனாதிபதியோ துணைபோக மாட்டார்கள் என்பதில் முஸ்லிம்கள் நம்பிக்கையாக இருக்கின்றார்கள்.
இப்புனித றமழான் மாதத்தில் ஜவேளை, ஜூம்ஆ தொழுகையினையும் ஏனைய விஷேட வணக்க வழிபாடுகளையும் நிம்மதியாக பள்ளிவாசலில் மேற்கொள்ள முடியாமல் பரிதவிக்கும் பிரதேச வாசிகள் சகிப்புத்தன்மை, பொறுமைமை என்பவற்றை கடைப்பிடித்து நடந்து கொள்ளுமாறும் முஸ்லிம்கள் அனைவரும் இலங்கை முஸ்லிம்களின் அவல நிலை தொடர்பில் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். .
நோன்பு காலத்தில் மக்கள் நிம்மதியாக பள்ளிவாசல்களில் வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் மூடப்பட்டுள்ள பள்ளிவாசல் திறக்கப்பட்டு பாதுகாப்பு ஊர்ஜிதப்படுத்தபட்டு மக்கள் வழமை போன்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட ஆவண செய்வதற்கான நடவடிக்கையினை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் மேற் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்
Leave a comment