கொழும்பு: இலங்கையில் நடைபெறவிருந்த, இரண்டாவது பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் நடக்கும் பிறீமியர் தொடர் (ஐ.பி.எல்) போல இலங்கை கிரிக்கெட் வாரியம் (எஸ்.எல்.சி), கடந்த ஆண்டு பிறீமியர் T20 தொடர் நடைபெற்றது. இரண்டாவது தொடர், வரும் ஆகஸ்ட் 10ம் திகதி- செப்டம்பர் 7ம் திகதி வரை நடக்க இருந்தது.
ஆனால், அணி உரிமையாளர்கள் தொடரில் பங்கேற்க தேவையான கட்டணத்தை செலுத்தவில்லை. இதனால், இந்த ஆண்டுக்கான தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து எஸ்.எல்.சி., வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஆகஸ்ட் மாதம் நடக்க இருந்த இரண்டாவது இலங்கை பிறீமியர் லீக் தொடருக்காக, அணி உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை கொடுக்கவில்லை.
தவிர, வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்திற்காக வங்கியில் செலுத்தப்படும் வைப்புத் தொகையும் செலுத்தப்படவில்லை. இந்நிலையில் தொடரை நடத்த முடியாது. எனவே, இந்த ஆண்டு பிறீமியர் தொடர் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பள விவகாரங்களில் ஏற்கனவே இலங்கை கிரிக்கட் அணிக்குள் பல விரிசல்கள் கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment