கொழும்பு: இலங்கையின் நேச நாடுகளுள் ஒன்றான பங்களாதேஷ் உடன் நல்லுறவுகளை மேலும் கட்டியெழுப்புவதன் அவசியம் பற்றி நீதியமைச்சரும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அந்நாட்டு உயர்ஸ்தானிகர் முஹம்மத் சுபியுர் ரஹ்மானுடன் ஆராய்ந்தார்.
இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் முஹம்மத் சுபியுர் ரஹ்மான், அந்நாட்டின் இலங்கைக்கான கவுன்சலர் புர்ஹான்னுத்தீன் ஆகியோர் அமைச்சர் ஹக்கீமை புதன்கிழமை (17) நண்பகல் நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
நீதித்துறையைப் பொறுத்தவரை இரு நாடுகளுக்கும் இடையே குடியியல் மற்றும் குற்றவியல் தொடர்பான விவகாரங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பதற்கான இணக்கப்பாடொன்றுக்கு வருவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே சிறைக்கைதிகள் பரிமாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கும் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்வது பற்றியும் குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம், அவ்வாறான ஒரு நடைமுறை இலங்கைக்கும் ஏனைய சில நாடுகளுக்கும் இடையில் இருந்து வருவதாகவும் கூறினார்.
இலங்கையில் பங்களாதேஷ சிறைக்கைதிகள் மிகச் சிலரே உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அந்நாட்டில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர் தொழில் புரிந்து வருவதாக தூதுவர் ரஹ்மான் சொன்னார். வர்த்தக நிறுவனங்கள், பொறியியல், கட்டிடக்கலை நிறுவனங்கள் போன்றவற்றில் ஏற்படும் தொழில் மற்றும் நிதிப் பிணக்குகளை தீர்த்து வைப்பதற்கு இலங்கையில் அமையவுள்ள உத்தேச நடுத்தீர்ப்பு மையத்தின் உதவியை நாடலாம் என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டிய பொழுது தற்பொழுது அவ்வாறான பிணக்குகளுக்கு சிங்கப்பூர் போன்ற நாடுகளையே நாட வேண்டியிருப்பதாக கூறிய தூதுவர், இலங்கையில் அவ்வாறனதொரு சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் அமையுமானால் அதன்மூலம் பங்களாதேஷூம் பயனடையும் வாய்ப்பு உண்டென்பதை ஏற்றுக்கொண்டார்.
இலங்கையின் தற்போதைய சூழ்நிலை குறித்தும், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இந்த உரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை முஸ்லிம்களுக்கும், பங்களாதேஷில் வசிக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சமய, பண்பாட்டு ரீதியில் ஒத்த தன்மைகள் காணப்படுவதன் காரணமாக நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் அவர்கள் ஆராய்ந்தனர். அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரும் இக் கலந்துரையாடலின் போது பிரசன்னமாகியிருந்தார்.



Leave a comment