மீண்டும் மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் தாக்கப்படுவதற்கான அச்சுறுத்தல்….

– பழுலுல்லாஹ் பர்ஹான்

???????????????????????????????மஹியங்கன: மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளானதை தொடர்ந்து, மீண்டும் அங்கு தீவிரவாத, இனவாத கும்பல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக நம்பகமாக தெரியவருவதால், அவ்வாறான நிலைமை ஏற்படாமல் தடுப்பதற்கான முயற்சியில் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூடுதல் கவனம் செலுத்திவருகிறார்மஹியங்கனை பள்ளிவாசல் ஸ்தாபகத் தலைவரும், முக்கியஸ்தருமான எஸ்.எம். சீனிமுஹம்மத் ஹாஜியார் மற்றும் பள்ளிவாசல் பரிபாலனசபை உறுப்பினர் ஏ.எல். நஜிமுத்தீன், மௌலவி ஏ.எம்.எம்.ஏ. பர்ஹான் ஆகியோர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று நண்பகல் நீதியமைச்சில் சந்தித்து, அந்தப் பள்ளிவாசலின் நீண்ட வரலாறு, அதன் பின்னணி, முஸ்லிம்களின் அன்றாட சன்மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதில் அதன் முக்கியத்துவம், இன்றைய சூழ்நிலை என்பவற்றை விளக்கிக் கூறினர்.

மடிக்கணிணியில் பதிவாகியுள்ள பள்ளிவாசல் தாக்குதல் சம்பந்தமான படங்களையும் அமைச்சர் பார்வையிட்டார். பள்ளிவாசலினுள் போடப்பட்டிருந்த செத்த பன்றியின் உடற்பாகங்கள் சிதறிக் கிடந்ததையும் அமைச்சர் கண்ணுற்று ஆழ்ந்த கவலையடைந்தார்.

மஹியங்கனை பள்ளிவாசல் பிரதம தர்மகர்த்தா அல்ஹாஜ் சுலைமான் உடனும் அமைச்சர் தொலைபேசியில் இது தொடர்பில் உரையாடினார்.

தமது கட்சியின் மறைந்த தலைவர் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களும் தாமும்அம்பாறை மாவட்டத்திற்கு பயணிக்கும் வழியில்  மஹியங்கனை பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்ட நிகழ்வுகளையும் அமைச்சர் நினைவூட்டினார்.

உடனடியாகவே அரசியல் முக்கியஸ்தர்கள் சிலருடனும், பொலிஸ் உயர் அதிகாரிகளுடனும், முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஸமீல் உடனும் அமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையை எடுத்துரைத்தார்.

பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன், பதுளை ஊவா பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, அப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் தெணுக, ஊவா மாகாண அமைச்சர் அனுர விதானகம ஆகியோருடன் அமைச்சர் ஹக்கீம் தொடர்புகொண்டு மீண்டும் அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல்,

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

கூட்டம் நடத்தும் முகமாக ஒன்று கூடுவதை தடுப்பதற்கு சட்டத்தின் பிரகாரம் முடியாதுள்ளதாக பொலிஸ் தரப்பில் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டபொழுது, அதற்கு பதிலளித்த அவர், ஜனநாயக நாடொன்றில் இனக்குரோதத்தை தூண்டும் விதத்திலான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளப்பட்டால் அதை அரசாங்கத்தினதும், நாட்டினதும் நற்பெயருக்கு உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் களங்கத்தை ஏற்படுத்துவிடும் என்றார். பொதுபலசேனா என்ற பௌத்த தீவிரவாத அமைப்பின் செயல்பாடுகளை அமைச்சர் கண்டித்தார்.

மஹியங்கனை பள்ளிவாசல் தாக்குதல் சம்பந்தமாக வார இறுதியில் தாம் கண்டியிலும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர்  தெரிவித்தார்.

மஹியங்கனை பள்ளிவாசல் 1991 ஆம் ஆண்டிலிருந்து அங்கு அமைந்திருப்பதாக கூறிய அமைச்சர், 21 ஆண்டுகளாக அங்கு காணப்படும் பள்ளிவாசலுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையிட்டு கவலை தெரிவித்தார்.

சீனி முஹம்மத் ஹாஜியார் அங்கு 44 ஆண்டுகளாக மஹியங்கனையில் வர்த்தகம் செய்து வருவதாகவும், அங்கு மேலும் 50 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. சில முஸ்லிம் குடும்பங்களும் அங்கு வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.???????????????????????????????

Published by

Leave a comment