டெல்லி: மகாபோதி கோவிலை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்தும் அதை ஏன் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், புத்தகயாவில் உள்ள கோவிலை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்தும் அதை தடுத்து நிறுத்த பீகார் அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளது. இது போன்ற தாக்குதல்களை தவிர்க்க மத்திய அரசும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
உலகிற்கு அமைதியை போதித்த புத்தரின் கோவிலை தீவிரவாதிகள் தாக்கியுள்ளது சீரியஸான பிரச்சனை. இந்த தாக்குதலை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. இது போன்ற தாக்குதல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில்,
இந்த தாக்குதலை கண்டிக்கிறேன். இந்த தாக்குதல் குறித்து உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில் அதை தடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுடையது. இது குறித்த விசாரணை நடந்து உண்மை வெளிச்சத்திற்கு வரட்டும்.
பீகாரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. பீகாரை ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி 15 ஆண்டுகள் ஆட்சி செய்தபோது இது போன்ற சம்பவங்கள் நடந்ததே இல்லை. நம்மால் புத்த கோவில்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்ற தவறான தகவல் பரவும். இனி இந்த இடத்திற்கு வர மக்கள் பயப்படுவார்கள் என்றார்.


Leave a comment