PMGG ஜம் இய்யத்துல் உலமாவுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்!

pmgg– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: பொது விடயங்களில் வட்டியோடு தொடர்புபட்ட நிதிகளை எவ்வாறு கையாள்வது சம்மந்தமாக உரிய விளக்கங்களை கா-குடி நகர சபைக்கும் அரசியல் வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெளிவு படுத்துமாறு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைக்கு கா-குடி நல்லாடசிக்கான மக்கள் இயக்க கா-குடி நகர உறுப்பினர்கள் வேண்டுகாள் விடுக்கின்றனர்.

அது தொடர்பில் கா-குடி நல்லாடசிக்கான மக்கள் இயக்க கா-குடி நகர சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.சபீல் நளீமி மற்றும் எம்.எச்.ஏ.நஸார் ஆகியோர் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா  சபைக்கு  அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

காத்தான்குடி நகர சபையினால் வட்டிக்கு கொள்வனவு செய்யப்படவுள்ள JCB இயந்திரம் சம்பந்தமாக தங்களது கவனத்தை  உடனடியாக ஈர்க்க விரும்புகின்றோம்.

காத்தான்குடி நகரசபையில் 2013 பெப்ரவரி மாதம் 08ம் திகதி இடம்பெற்ற அவசர விஷேட சபை அமர்வில் மேற்படி இயந்திரத்தினை நகர சபையின் வருமான ஈட்டலுக்காக LLDF நிதியில் இருந்து 9% வட்டிக்கு கொள்வணவு செய்யவுள்ளதாக நகர சபை தவிசாளர் சபைக்குத் தெரிவித்திருந்தார்.

இது இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான ஹறாமான செயல் என்ற காரணத்தினால் நாம் இதனை மிகக் கடுமையாக எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இறுதியில் இவ்விடயத்தில் எதுவித தீர்மானமும் பெறப்படாமல் அக்கூட்டம் நிறைவுற்றது. ஆனால், பெப்ரவரி மாத சபைக் கூட்டறிக்கையினை நாங்கள் அவதானித்த போது இதற்கான சபையின் அனுமதியை வழங்குவதென ஜனாப். எச்.எம்.எம். பாகிர் அவர்கள் முன்மொழிந்ததாகவும் கௌரவ துணை நகர முதல்வர் அல்ஹாஜ் MIM. ஜஸீம் அவர்கள் வழிமொழிந்ததாகவும்  கூட்டறிக்கையில் எழுதப்பட்டிருந்தது. (தீர்மான இலக்கம் 2013/10)

அதன்பின்னர், 2013 பெப்ரவரி மாதம் 21ம் திகதி இடம்பெற்ற வழமையான சபை அமர்வில் சுயேட்சைக் குழு 1  நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் இவ்விடயம் சம்பந்தமாக அவசரக் கூட்டத்தில் கூறிய கருத்துகள் எதுவும் இடம்பெறாத காரணத்தினால் அத்தீர்மானம் பின்வருமாறு மாற்றப்பட்டது. ‘ JCB பெக்கோ லோடர் வாகன கொள்வனவிற்கு அனுமதி வழங்கள் தீர்மானத்தை சுயேட்சைக் குழு 01 இன் கௌரவ உறுப்பினர்களான அல்ஹாஜ். ஏ.எல்.எம். சபீல் அவர்களும் ஜனாப். MHA நசீர் அவர்களும் அங்கீகரிக்கவில்லை யென திருத்தம் மேற்கொள்ளப்பட்டது’

அதனைத் தொடர்ந்து 2013 மார்ச் மாதம் 21ம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் ‘ மேற்படி பெப்ரவரி மாத அவசர சபை அமர்வில் இவ்விடயத்தினை ஜனாப். பாகிர் அவர்கள் பிரேரிக்கவில்லையென்றும் தவிசாளரே இவ்விடயத்தினை சபைக்கு கொண்டுவந்ததாகவும் ஜனாப் பாகிர் அவர்கள் சபையில் தெரிவித்ததற்கினங்கவும் மேற்படி தீர்மானத்தின் பிரகாரம் வட்டிக்கு JCB வாகனத்தை கொள்வனவு செய்ய முடியாது என சபை உறுப்பினர்கள் உறுதியாக தெரிவித்ததால் அத்தீர்மானத்தை இரத்துச் செய்து வட்டி சம்பந்தப்படாத ஷரீஆ முறைப்படி கொள்வனவு செய்வதற்கு கௌரவ உறுப்பினர் றஊப் ஹாஜியார் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆராய்ந்து அவர்களின் அறிக்கையின் பின்னர் JCB வாகனத்தை கொள்வனவு செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டதாக திருத்தம் செய்யப்பட்டது.

விடயம் இவ்வாறு இருக்கின்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் 27ம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அவர்களின் கடிதத்தின் பிரகாரம் அவ்வியந்திரத்தை வட்டிக்கு வாங்க வேண்டுமென எங்களது ஆட்சேபனைகளையும் கருத்துகளையும் புறந்தள்ளிவிட்டு இஸ்லாமிய வழிமுறைக்கு மாற்றமான ஹறாமான தீர்மானம் பெறப்பட்டுள்ளது. இதற்கு தவிசாளர் கூறிய காரணமும் எங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. உலமாக்கள் வட்;டிக்கு இதனைக் கொள்வனவு செய்வதற்கு முடியும் என  ‘பத்வா’ வழங்கி இருப்பதாக தெரிவித்தார். அவ்வுலமாக்கள் யார் என நாம் வினவியபோது அதனைத் தவிசாளர் கூற மறுத்துவிட்டார்.

கடந்த காலங்களிலும் கூட தவிசாளர் தன்னுடைய பிழையான செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக உண்மைக்குப் புறம்பான பல தகவல்களை சபைக்கு வழங்கியதையும் நாம் அறிவோம். எனவேதான், இவ்விடயத்திலும்கூட தவிசாளர் உலமாக்களையும் உலமா சபையையும் பிழையாக பயன்படுத்தியிருக்கிறார் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.

எனவே, தவிசாளரை அழைத்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறியுமாறும் இதுபோன்ற பொதுவிடயங்களில் வட்டியோடு தொடர்புபட்ட நிதிகளை எவ்வாறு கையாள்வது சம்பந்தமாக உரிய விளக்கங்களை நகர சபைக்கும் அரசியல் வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெளிவு படுத்துமாறு தயவுடன் வேண்டிக் கொள்கின்றோம் என  நல்லாட்சிக்கான மக்கள் இயக்க கா-குடி நகர உறுப்பினர்களான ஏ.எல்.எம்.சபீல் நளீமி மற்றும் எம்.எச்.ஏ.நஸார் ஆகியோர் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by

Leave a comment