மட்டக்களப்பு: வடக்கு மாகாணத்தில் மக்களது வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தியால் அம்மாவட்டத்தை கட்டியெழுப்புவதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரும்பாடுபட்டு உழைத்து வருகின்றார். வடக்கிலே நான் பணியாற்றிய காலகட்டத்தில் இதனை நேரடியாக கண்டுணர்ந்திருக்கின்றேன் அந்த வகையில் அமைச்சர் அவர்களது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வருகையானது எமக்கு பெரிதும் உற்சாகமளிக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வாழ்வின் எழுச்சி (திவிநெகும) திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராய்ந்தறியும் கூட்டம் செய்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக அலுவலகத்தில் ஆரம்பமான போது அந்நிகழ்விற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும்; தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்திலே பனை வளங்கள் உள்ள போதும் அந்த வளங்கள் பூரணமாக பயன்படுத்தப்படுவது இல்லை என்ற கருத்து நிலவி வந்த காலத்திலேயே அமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றதன் பின்னர் பனைவளத்தின் உச்சபயனை அடைய வேண்டுமென்பதில் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
அந்த வகையிலே மட்டக்களப்பு மாவட்டத்தின் பனை வளம் சார்ந்த உற்பத்திகள் தற்போது பெருகி வருவதை காணக்கூடியதாகவுள்ளது. எனினும் பனைசார் கைப்பணித்துறைகளில் அலங்காரப் பொருட்களின் உற்பத்திகள் இம்மாவட்டத்திலேயே அதிகரித்துள்ள போதும் பனைசார் உணவுப் பொருட்களின் உற்பத்திகள் தரமானதாக அதிகரிக்க வேண்டியுள்ளது.
இதுதொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், உரிய நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.




Leave a comment