கொழும்பு: மின்கட்டணப் பற்றுச்சீட்டைப் பார்த்த அதிர்ச்சியில் ஒருவர் மாரடைப்பால் மரணமாகியுள்ளதாக சனிக்கிழமை அன்று வெளியாகிய இலங்கை ஊடகம் தெரிவித்துள்ளது. தனது மின்சாரக் கட்டணமானது திடீரென அதிகரித்துள்ளதாக கூறி 61 வயதான SP சமரதாச, வெள்ளியன்று கொழும்பிலுள்ள சிறிலங்கா மின்சார சபையிடம் முறைப்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்திலிருந்து மின்சாரக் கட்டணத்திற்கான வரி அதிகரித்துள்ளாதாலேயே இவரது மின்கட்டணம் அதிகரித்ததாக சிறிலங்கா மின்சார சபை பாதிக்கப்பட்ட நபரிடம் தெரிவித்ததாகவும், இதற்கு மறுநாள் இவர் மாரடைப்பால் மரணமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இறந்த சமரதாசவின் மின்கட்டணம் எவ்வளவு என்பது வெளியிடப்படவில்லை. ஆனால் தற்போது மின்கட்டண வரியானது 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமரதாச மாரடைப்பாலேயே இறந்துள்ளார் என ‘சிலோன் ருடே’ பத்திரிகையின் முன்பக்கச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.
இலங்கை, ஒரு கிலோவாற் மின்கட்டணத்திற்கு 0.37 டொலர்களை அறவீடு செய்வதால், ஆசியாவில் மின்சாரக் கட்டணம் மிகவும் அதிகரித்துள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்றாகக் காணப்படுகின்றது.
இலங்கையில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் மூன்றில் இரண்டு பகுதியானது நிலக்கரி அல்லது எரிபொருளைப் பயன்படுத்திப் பெறப்படுகிறது. வறட்சி நிலவும் காலங்களில் நீரிலிருந்து மின்சக்தியைப் பெறமுடியாது.
2013ல் மின்சார உற்பத்தியில் 750 மில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் மே மாதத்திலிருந்து வரிவீதம் அதிகரிப்பதால் மின்சாரக் கட்டணத்தில் 225 மில்லியன் டொலர்கள் மேலதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா மின்சார சபை தெரிவித்துள்ளது. Jpc
Leave a comment