லிமா: பெரு நாட்டில் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த 60 மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இறந்த உடல்களை துணிகளில் சுற்றி பதப்படுத்தி வைக்கும் முறை வழக்கத்தில் இருந்தது. இறந்தவர்களின் உடலோடு சேர்த்து, அவர்களின் தகுதிப்படி தங்கம், வெள்ளிப் பொருட்களையும் புதைப்பது அம்மக்களின் இறுதிச்சடங்கு முறை.
அந்த வரிசையில், தற்போது, தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெரு நாட்டில் 7 மற்றும் 11-ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த 60 மம்மிகளை அகழ்வாராய்ச்சியளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
போலந்து மற்றும் பெரு நாட்டைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டறிந்த கல்லறையில் 3 இளவரசிகள் உட்பட 60 பதப்படுத்தப்பட்ட உடல்கள் கிடைத்துள்ளன. இந்தக் கல்லறைகள் பூமிக்கடியில் 2 மீட்டர் ஆழத்தில் 33 டன் சரளைக்கற்களை கொண்டு கட்டப்பட்டிருந்தன்ச்.
இதிலும் தகுதி, தரம் உண்டாம்… அந்த மம்மிக்கள் அவர்களின் குடும்ப தகுதிப்படி தரம் விரிக்கப்பட்டு, அங்கே புதைக்கப்பட்டிருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புதைக்கப்பட்டிருந்த மம்மிகள் பெரும்பாலும் பெண்களே. 60 மம்மிக்களோடு 1200 தங்க, வெள்ளி, பீங்கான் பொருட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அரச குடும்பக் கல்லறைகள்:
இந்தக் கல்லறைகள் வாரி நாகரீகத்தை சார்ந்த அரச குடும்பத்தின் கல்லறைகள் எனக் கண்டறியப் பட்டுள்ளது. இதுவே, பெருவின் முதலாவது அரசக் கல்லறையின் கண்டுபிடிப்பு என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
மம்மிகளோடு சேர்த்து புதைக்கப்பட்ட மற்ற தங்கம், வெள்ளி, பீங்கான் பொருட்கள், கத்தி, பானைப் பொருட்கள் எல்லாம் நல்ல நிலையில் உள்ளன. இவற்றின் மூலம் அம்மக்கள் வாழ்ந்த காலத்தின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ள இயலும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.





Leave a comment