கண்டி: மழை பொழியும் பொழுது, கிழிந்து போன கூரையின் கீழ் சென்று ஒதுங்க முடியாது ஓட்டை விழுந்த கூரையில் இருந்து வழியும் நீரில் நனைய முடியாது. இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், கண்டி, கடுகஸ்தொட்டை வீதியில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) நண்பகல் நடைபெற்ற ஒன்றுகூடல் ஒன்றின்போது உரையாற்றுகையில் தெரிவித்ததாக இன்று வெளியான அநேக சிங்கள, தமிழ், ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலத்திரனியல் ஊடகங்களும் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் அளித்து நேற்று இரவும் இன்று காலையும் ஒளிபரப்புச் செய்துள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கத்தை பலவீனப்படுத்தி, வலுவிழக்கச் செய்வது முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமல்ல. வெளியில் உள்ள சக்திகளுக்கு நாங்கள் ஒருபோதும் உடந்தையாகச் செயல்படவும் மாட்டோம். நிறையப்பேர் நாங்கள் அவ்வாறு நடந்து கொள்வோம் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால், என்னைப்பொறுத்தவரை நான் எமது மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் எங்கள் கருத்துக்களை துணிச்சலுடன் முன்வைத்து வருகிறேன். அதனை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. என்னை பயமுறுத்தி, அடிபணிய வைக்கவும் யாராலும் முடியாது.
தாம் வடமேல் மாகாண சபையில் 13ஆவது திருத்தம் தொடர்பான வாக்களிப்பின் பொழுது அச்சுறுத்தப்பட்டதாலேயே அதற்கு ஆதரவாக வாக்களிக்க நேர்ந்ததாக எமது கட்சியின் உறுப்பினர்கள் இருவர் எங்களிடம் தெரிவித்து தாம் அவ்வாறு நடந்து கொண்டதற்காக எமது உச்சபீட கூட்டத்தில் மன்னிப்பு கோரினார்கள். அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லாவிதமான நிலைப்பாடுகளுக்கும் அடிமைகள் போன்று எங்களால் தலைசாய்க்க முடியாது.
எங்களை தீவிரவாதிகள் என கூறுவோரும் உள்ளனர். முற்றிலும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்துகிறார்கள். 1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் விளைவு மிகவும் பாரதூரமான தமிழுக்கும் தேசிய மொழி அந்தஸ்து நீண்டகாலத்தின் பின்னர் வழங்கப்பட்ட போதிலும், தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதற்கு இன்னும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருவது மிகவும் கவலைக்குரியது. தமிழுக்குத் தேசிய மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதால், சிங்கள மொழிக்கு ஏதும் தீங்கு நேர்ந்துள்ளதா என கேட்க விரும்புகின்றேன்.
இந்த நாட்டிலே சிறுபான்மை மக்களுக்கும் போதுமான அரசியல் உரிமைகள் இருக்கவேண்டியது அவசியமாகும். முன்னர் வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணைக்கப்பட்ட பொழுது அதனால் சிங்கள மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. முஸ்லிம்களைத்தான் அது பாதித்தது. பின்னர் அந்த இணைப்பு நீதிமன்ற தீர்ப்பின் மூலம் இல்லாமல் செய்யப்பட்டது. ஜனாதிபதி நீண்டகால அனுபவம் வாய்ந்த மதி நுட்பமுள்ளவர். அவர் எங்களைப் பற்றி நன்கு தெரிந்தவர்.
அரசாங்கத்தில் உள்ள சில சக்திகள் வௌ;வேறு விடயங்களை உளறுகின்றன. அச் சக்திகள் தெரிவிக்கும் இனவாத கருத்துக்களோடு எங்களுக்கு அறவே உடன்பாடில்லை. ஜனாதிபதியை தங்களுக்கு ஏற்றவாறு வளைத்துப்போட்டுக்கொள்ள அச் சக்திகள் எத்தனிக்கின்றன. ஆனால், ஜனாதிபதியின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எங்களை வெளியேற்றினாலே ஒழிய, நாங்களாக அரசாங்கத்தை விட்டு வெளியேறப்போவதில்லை.
மழை பொழியும் பொழுது கிழிந்துபோன கூரையின் கீழ் சென்று ஒதுங்க முடியாது. ஓட்டை விழுந்த கூரையில் இருந்து வடியும் நீரில் நனையவும் முடியாது. உள்நாட்டுச் சக்திகளுக்குப் போலவே வெளிநாட்டுச் சக்திகளுக்கும் நாங்கள் உடந்தைகளாக செயல்பட முடியாது. நாங்கள் தேர்தல்களின் போது தனித்துப்போட்டியிடுவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என்றார்.

Leave a comment